சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (எஸ்எம்யு) நேற்று தனது ஏழு மாடி எரிசக்தி சிக்கன கட்டடத்தைத் திறந்தது. அந்தப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பள்ளியும் ஒருங்கிணைந்த கல்விக் கல்லூரியும் அந்தக் கட்டடத்தில் அமைந்து இருக்கும்.
புதிய கட்டடத்தின் கூரையில் சூரியசக்தித் தகடுகள், எரிசக்தியைச் சிக்கனப்படுத்தும் குளிர்சாதன முறை போன்ற அம்சங்கள் இருக்கின்றன.
வெப்பத்தைக் குறைக்கும் விதத்தில் அந்தக் கட்டடம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் கட்டடம் முழுவதும் அதிக வெளிச்சமும் இருக்கும்.
ஆகையால், அந்தக் கட்டடத்தில் ஒளியேற்றவும் குளுமை வசதியை ஏற்படுத்தவும் குறைவான எரிசக்தியே தேவைப்படும்.
கட்டட, கட்டுமான ஆணையத்தின் பசுமை அடையாள எரிசக்தி குறைவு கட்டட பிளாட்டின விருது 2020ல் அந்தக் கட்டட திட்ட வடி வமைக்குக் கிடைத்தது.
அதாவது, அந்தக் கட்டடம் குறைந்தபட்சம் 60 விழுக்காட்டு எரிசக்தியை மிச்சப்படுத்தும்.
எஸ்எம்யு பல்கலைக்கழகத்தின் வளாகம் பிராஸ் பாசா, பூகிஸில் பரந்து விரிந்து அமைந்துள்ளது.
சிங்கப்பூரின் நகர மையத்தில் ஆகப் பெரிய சூரியசக்தி ஆலை இங்குதான் இருக்கிறது. அந்த ஆலை, இந்தப் பல்கலைக்கழக வளாகத்தின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் ஏறக்குறைய 12%ஐ ஈடுசெய்கிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்த புதிய கட்டட தொடக்க நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கலந்துகொண்டார்.
பருவநிலை மாற்றம் போன்ற முக்கியமான சவால்கள் சிக்கலானவை. பல்வேறு துறைகளைச் சேர்ந்த, பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் அவற்றுக்கான புத்தாக்கத் தீர்வுகளைக் காண வேண்டி இருக்கும் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.
புதிய ஒருங்கிணைந்த கல்விக் கல்லூரி, பல துறைகளை உள்ளடக்கக்கூடிய கல்வியைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும் என்றார் துணைப் பிரதமர்.

