புதிய வகை போதைப்பொருள்களால் (என்பிஎஸ்) ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சமாளிக்க ஏதுவாக வரும் மாதங்களில் சட்டங்கள் கடுமையாக்கப்படும்.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக சிங்கப்பூர் கைக்கொண்டு வரும் கடுமையான நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் இருக்கும். தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ இதனைத் தெரிவித்தார்.
ஒரு பொருள், போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் வகைப்படுத்தப்படவில்லை என்றாலும்கூட அந்தப் பொருளினால் ஏற்படக்கூடிய போதை விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சு பரிந்துரைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
உள்துறைக் குழுவின் என்எஸ் காத்திப்பில் நேற்று நடந்த உள்துறை அமைச்சின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார். புதிய வகை போதைப்பொருள்களை மிகவும் செம்மையான முறையில் கையாள ஏதுவாக அடுத்த சில மாதங்களில் சட்டங்கள் கடுமையாக்கப்படுவது ஏன் என்பதையும் அவர் விளக்கினார்.
"புதிய வகை போதைப்பொருள்களை ஆய்வுக்கூடத்திலேயே எளி தாக தயாரித்துவிடலாம். அத்தகைய ஆய்வுக்கூடங்களை அமைப்பதும் அவ்வளவு சிரமமான ஒன்றல்ல.
"சந்தைக்கு வரக்கூடிய புதுப்புது போதைப்பொருள்களை எல்லாம் கண்காணித்து கவனித்து வருவது என்பது பெரிய சவாலாக இருக்கிறது," என்று திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.
புதிய வகையிலான 13 போதைப்பொருள்கள் கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டன. அவை ஏ பிரிவு போதைப்பொரு ளாகப் பட்டியலிடப்பட்டன.
இப்படி செய்ததன் மூலம் அத்தகைய பொருள்களைக் கடத்துவது, தயாரிப்பது, இறக்குமதி, ஏற்றுமதி செய்வது, வைத்திருப்பது, புழங்குவது எல்லாம் குற்றச்செயலாக ஆக்கப்பட்டு உள்ளன.
மஷ்ரூம், ஸ்பைஸ் போன்ற புதிய வகை போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதால் மனமயக்கம், மரணம் போன்ற பாதிப்புகள் உடலளவிலும் மனத்தளவிலும் ஏற்படுவதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கூறுகிறது.
போதைப்பொருளுக்கு எதிரான சிங்கப்பூரின் நிலை பற்றி விளக்கிய திருவாட்டி டியோ, தொடர்ந்து கடுமையான அணுகுமுறைகளை சிங்கப்பூர் கைக்கொண்டு வரும் என்று குறிப்பிட்டார்.
இதில் மரண தண்டனை விதிப்பதும் உள்ளடங்கும் என்றார் அவர்.
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது விரும்பிய பலனைத் தராத ஒன்று என்று கூறப்படும் கருத்துகள் கபடத்தனம் வாய்ந்தவை, பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என்று அமைச்சர் தெரிவித்தார்.
மரண தண்டனை நடப்பில் இருப்பதன் காரணமாக சிங்கப்பூருக்குள் கடத்தப்படும் போதைப்பொருள்களின் அளவு கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

