எண் 860 நியூ அப்பர் சாங்கி ரோட்டில் உள்ள முன்னாள் பிடோக் சவுத் உயர்நிலைப்பள்ளி வளாகம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இடிக்கப்படும். அந்த இடத்தில் வீடுகள் கட்டப்படும்.
இடிப்புப் பணிகள் சுமார் ஐந்து மாதம் நடக்கும் என்று மதிப்பிடப்படுவதாக கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார் என்று சண்டே டைம்ஸ் தெரிவித்தது.
இடிப்புப் பணிகள் முடிவடைந்ததும் அந்த இடம் சிங்கப்பூர் நில ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும். பிறகு அந்த இடத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் எடுத்துக்கொள்ளும். ஏறத்தாழ இரண்டு காற்பந்து திடல்கள் அளவுக்கு 1.6 ஹெக்டர் பரப்பளவுடன் கூடிய அந்த இடம், குடியிருப்புப் பயனீட்டிற்காக வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அந்த இடத்திற்கான திட்டங்கள் பூர்த்தியானதும் திட்ட விவரங்கள் பற்றி அறிவிக்கப்படும் என்று வீவக கூறியதாகவும் சண்டே டைம்ஸ் தெரிவித்தது.
முன்னாள் பிடோக் சவுத் உயர்நிலைப்பள்ளி 1980ல் திறக்கப்பட்டது. 2002 டிசம்பர் வரை 20 ஆண்டுகளுக்கும் அதிக காலம் அந்தப் பள்ளி சேவை வழங்கியது.
அது இப்போது ஜாலான் லாகார் பிடோக்கில் 3 ஹெக்டர் பரப்பளவுள்ள இடத்தில் அமைந்து செயல்படுகிறது. இந்த இடமும் பழைய இடமும் ஏறத்தாழ 1.6 கி.மீ. தொலைவில் இருக்கின்றன.
இதனிடையே, இடிக்கப்படும் பள்ளிக்கூட வளாகம் உள்ள இடத்தில், அளவையும் கட்டுமான இட விகிதாச்சாரத்தையும் பொறுத்து 500 முதல் 600 வீடுகளை கட்டலாம் என்று சொத்துத் துறை பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இவ்வேளையில், மீண்டும் கட்டி உருவாக்கப்படும் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி 2028ல் திறக்கப்படும்போது அது 4.3 ஹெக்டர் பரப்பளவுள்ள இடத்தில் அமைந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனுடைய இப்போதைய இடப்பரப்பு 6 ஹெக்டர்.
நிலப் பரப்பளவைக் குறைக்கும் வகையில் கல்வி அமைச்சு அரசாங்க கல்வி நிலையங்களை உயரமான கட்டடங்களில் அமைக்க முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்தக் கல்லூரி, 2024 ஜனவரியில் அப்பர் சிராங்கூன் ரோட்டில் தற்காலிக இடத்திற்கு மாறும். அதிலிருந்து நான்காண்டுகளில் புதிய கல்லூரிக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும்.

