தென்கொரிய கூட்ட நெரிசலில் சிக்கி நூலிழையில் உயிர் பிழைத்துள்ளார் சிங்கப்பூரர் ஒருவர்.
சனிக்கிழமைதான் 25 வயது கோ மிங் கென் தமது இரு சிங்கப்பூர் நண்பர்களுடன் தென் கொரிய தலைநகர் சோலுக்குச் சென்று சேர்ந்தார்.
ஹாலோவீன் பேய்த் திருவிழாவில் மூவரும் கலந்துகொண்டு களிப்பில் ஆழ்ந்திருந்த வேளையில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டார் கோ.
தமது இரு நண்பர்களைவிட்டுப் பிரிந்த அவர் தமது உயிருக்காகப் போராடவேண்டியிருந்தது.
சில வேளைகளில் மக்கள் அலைபோல தள்ளப்பட்டனர் என்றும் பலர் தள்ளுமுள்ளுக்கு ஆளாகி கீழே விழுந்தனர் என்றும் கோ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.
"நானும் என் நண்பர்களும் அந்தக் கூட்டத்தில் உயிர்வாழ எங்களால் முடிந்தவரை போராடிக்கொண்டிருந்தோம்," என்றார் காணொளிகள் எடுக்கும் கலைஞராகப் பணிபுரியும் கோ.
அந்தக் கூட்டத்திலிருந்து தப்பிக்க வழி தேடியபோது ஒரு கட்டத்தில் அவர் சுவர் ஒன்றின் மீது தள்ளப்பட்டதால் அவரது நண்பர்
களிடமிருந்து பிரிந்தார்.
மக்களுக்கு நடுவே சிக்கிக் கொண்டதால் மூச்சுவிடவே சிரமப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அப்போது தரையிலிருந்து சற்று உயரத்தில் இருந்த விளிம்பில் எப்படியோ ஏறிவிட்டார் கோ. அங்கிருந்து மதுக்கூடம் ஒன்றுக்குள் நுழையலாம் என்று முயன்றபோது அதன் பாதுகாவலர் அவரைத் தடுத்து நிறுத்தினார்.
"விளிம்பிலேயே நின்றுகொண்டிருந்தபோது பலர் கீழிலிருந்து தம்மை மேலே தூக்கும்படி என்னை எட்டிப் பிடித்தனர். நானும் அவர்களை மேலே இழுக்க முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை, அது ஆபத்துமிக்கதாகவும் இருந்தது" என்றார் கோ.
ஒரு கம்பியைப் பற்றிக்கொண்டு சுவற்றின் விளிம்பின் ஓரமாகவே மெல்ல மெல்ல நடந்து சென்றார் கோ. மிகவும் உயரமாக இருந்ததால் கீழே குதிக்கவும் முடியவில்லை.
பிறகு ஒருவழியாக சற்று இட வசதியுடன் கூடிய பகுதி வந்தது. அங்கே இருந்த கடைவீடுகளின் கூரையில் சறுக்கி கீழே குப்பைப் பைகளின் மீது குதித்துத்
தப்பினார் கோ.
"அங்கிருந்து நான்தான் கடைசியாகத் தப்பித்தேன். என் இரு நண்பர்களுக்கும் அடிபடவில்லை, எனக்குத்தான் சில வெட்டுக்
காயங்கள் ஏற்பட்டன. ஆனால் கூட்டத்தில் மாட்டி மயங்கியவர்களையும் இடிபட்டவர்களையும் ஒப்பிட்டால் என் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை.
"அங்கேயே தொடர்ந்து இருந்திருந்தால் என்ன ஆயிருக்கும் என்று என்னால் யோசிக்கக்கூட முடியவில்லை. நாங்கள் இறந்துஇருக்கலாம்," என்று விவரித்தார் கோ. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை குறைந்தது 153 பேர் உயிரிழந்துவிட்டனர்.

