பொன்மணி உதயகுமார்
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்காக இம்மாதம் 20, 21ஆம் தேதிகளில் மனநல நல்வாழ்வு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் திட்ட நிர்வாகத் துறையில் பயிலும் ஐவர் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், மனநலம் தொடர்பான தகவல்களைக் கொண்ட ஐந்து சாவடிகளும் விளையாட்டு நடவடிக்கைகள் கொண்ட ஐந்து சாவடிகளும் இடம்பெற்றிருந்தன.
மனநலம் தொடர்பான முக்கியத் தகவல்களை எளிமையாக, மாணவர் மனத்தில் நிலைக்கும் வகையில் கொண்டு சேர்க்கும் ஒரு நிகழ்வுக்குத் தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதாக ஏற்பாட்டுக் குழுவில் உள்ள தாரணி நாகராஜன், 21 மற்றும் முஹம்மது அரஃபாட், 20, கூறினர்.
தன்னுடைய உறவினர்களிடையே மனநலப் பிரச்சினை ஏற்பட்டதையும் மக்களிடையே மனநலம் தொடர்பான விழிப்புணர்வு குறைந்திருந்ததையும் உணர்ந்த ஏற்பாட்டுக் குழுத் தலைவர் அரஃபாட், இந்தத் தலைப்பில் தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாகக் கூறினார். மனநலம் குறித்த தவறான எண்ணங்கள் பரவியுள்ள நிலை மாற வேண்டும் என்பது இவரது விருப்பமாகும்.
"மனநலம் பாதிப்படைவது அனைவரும் சந்திக்கக்கூடிய ஒரு சிக்கல். உடனே ஒருவரை மனநலம் சரியில்லாதவர் என்று கருதுவதும் அதைப் பற்றி பேசத் தயங்குவதும் மாற வேண்டும்," என்கிறார் அரஃபாட்.
மனநலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத்திருவிழா, ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பது இவரது விருப்பம்.
மாணவர்களுக்கென பள்ளிகளில் இருக்கும் ஆதரவுத் தளங்களை நாடுமாறு மாணவர்களை அரஃபாட் ஊக்குவிக்கிறார்.
"பயமின்றி பள்ளி ஆலோசகர்களை அணுகும்போதுதான் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆதரவைப் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும். அதனால் தயக்கம் வேண்டாம்," என்றார் இவர்.
"உதவி நாடுவதற்கு முன்பு தனக்கு ஆதரவு தேவை என்று ஏற்றுக்கொள்வது அவசியம். அதோடு, தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களிலிருந்து மீண்டு வர முடியும் என்று ஒருவர் தன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்," என்று கூறினார் தாரணி.
தாரணி இளம் வயதில் தான் எதிர்நோக்கிய சவால்களால் மனநலம் குறித்து படித்து அறிந்து கொண்டவர். பெற்றோர் ஆதரவை அப்போது அவர் நாடியபோதும் ஆரம்பத்தில் தாரணியின் நிலைமையை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. காலப்போக்கில் தாரணிக்குத் தேவையான ஆதரவை வழங்கினார்கள். ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்த பிறகு அன்றைய தினத்தைப் பற்றி பெற்றோருடன் பேசியது தனக்கு உதவியாக அமைந்ததாக தாரணி பகிர்ந்துகொண்டார்.
"முன்பைக் காட்டிலும் பிள்ளைகளுக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருக்கும் பெற்றோர்கள் அதிகரித்துள்ளனர். இது நல்லதொரு மாற்றம். பெற்றோர்தான் பிள்ளைகளுக்கு முதற்கட்ட உதவி வழங்கும் நிலையில் உள்ளனர்," என்றார் தாரணி.
நண்பர்கள் மத்தியில் ஒருவருக்கு ஒருவர் உதவுதையும் இவர் முக்கியமாகக் கருதுகிறார். இளையர்கள் தங்களின் சமூக ஊடகப் பக்கத்தில் மனநலம் தொடர்பான ஆதரவு குறித்து பகிர்ந்துகொள்வதும் சிறப்பு என்கிறார் தாரணி.