சண்முகத்துடன் மரண தண்டனை பற்றிய நேரடி விவாதம்: ரிச்சர்ட் பிரான்சன் நிராகரிப்பு

சண்முகத்துடன் மரண தண்டனை பற்றிய நேரடி விவாதம்: ரிச்சர்ட் பிரான்சன் நிராகரிப்பு

3 mins read
42bfa136-a27d-4c3c-81bf-9e9ca28d3afe
பிரிட்டிஷ் செல்வந்தர் ரிச்சர்ட் பிரான்சன் (இடது), சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம். படங்கள்: புளூம்பர்க், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகத்துடன் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதம் செய்ய விடுக்கப்பட்ட அழைப்பை பிரிட்டிஷ் செல்வந்தர் ரிச்சர்ட் பிரான்சன் நிகாரித்துள்ளார். மரண தண்டனை குறித்து அமைச்சருடன் விவாதம் செய்ய அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தத் தலைப்பையொட்டி தொலைக்காட்சியில் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்று பிரான்சன் குறிப்பிட்டார். அதற்குப் பதிலாக சிங்கப்பூர் அரசாங்கம் சம்பந்தப்பட்ட உள்ளூர் அமைப்புகளுடன் கலந்துரையாடல் நடத்துவது ஆக்கபூர்வமாக இருக்கும் என்றார் அவர்.

சிங்கப்பூர் அரசாங்கம் போதைப் பொருள் கடத்துபவர்களை, குறிப்பாக ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் சிறுபான்மைச் சமூகத்தினரையும் தூக்கிலிட முனைப்பாக இருப்பதாக பிரான்சன் தமது வலைப்பதிவில் முன்னதாகப் பதிவு செய்தார்.

மலேசியரான நாகேந்திரன் கே. தர்மலிங்கத்துக்கு அறிவுசார் குறைபாடு இருந்தது என்று பலமுறை அவரது வழக்கறிஞர்கள் எடுத்துக்கூறப்பட்டும் அவர் கடந்த ஏப்ரல் மாதம் தூக்கிலிடப்பட்டார் என்று திரு பிரான்சன் கூறினார்.

அவர் கூறியதை மறுத்த உள்துறை அமைச்சு, நாகேந்திரனுக்காக வாதாடிய வழக்கறிஞர் நியமித்த மனநல மருத்துவ நிபுணரும் நாகேந்திரனுக்கு அறிவுசார் குறைபாடு இல்லை என்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார் என்றும் மேலும் தான் என்ன செய்கிறோம் என்று நாகேந்திரனுக்குத் தெரியும் என்றும் அவருக்கு அறிவுசார் குறைபாடு இல்லை என்றும் அமைச்சு வலியுறுத்தியது. திரு பிரான்சனின் கருத்தை நிராகரித்த உள்துறை அமைச்சு, மரண தண்டனை குறித்து அமைச்சர் சண்முகத்துடன் விவாதம் செய்ய அவருக்கு அழைப்பு விடுத்தது.

இதன் தொடர்பில் நேற்று பதிலளித்த திரு பிரான்சன், சிங்கப்பூர் மீதும் சிங்கப்பூரர்கள் மீதும் தாம் பெரும் மதிப்பு வைத்திருப்பதாகக் கூறினார். மரண தண்டனை விதிப்பு தொடர்பாக சிங்கப்பூரின் நிலைப்பாட்டைப் பார்க்கும்போது, அதில் பெரும் தவறு இருப்பதாக உணர்ந்ததால், தாம் அவ்வாறு குரல் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

தொலைக்காட்சி விவாதம் செய்வதற்குப் பதிலாக உள்ளூர் வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள், மரண தண்டனையை எதிர்ப்பவர்கள், திரு நாகேந்திரனின் வழக்கறிஞர் திரு எம். ரவி ஆகியோருடன் அரசாங்கம் கலந்துரையாடல் நடத்தலாம் என திரு பிரான்சன் யோசனை கூறினார்.

மரண தண்டனை, குற்றங்களைக் குறைக்கும் என்ற சிங்கப்பூரின் நிலைப்பாட்டில் ஆதாரம் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூருக்குள் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தகவல், தொடர்பு அமைச்சரும், உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ சில தினங்களுக்கு முன் குறிப்பிட்டார்.

உள்துறை அமைச்சு நடத்திய ஆய்விலும் மற்ற ஆய்வுகளிலும் பத்தில் ஆறு சிங்கப்பூரர்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்குத் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கின்றனர் என்றும் மரண தண்டனை ஒன்றால்தான் போதைப் பொருள் கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களைத் தடுக்க முடியும் என்று இவ்வட்டாரத்தில் வசிப்பவர்கள் கருதுகிறார்கள் என்றும் தெரியவந்தது.

"இருப்பினும் சிலர், போதைப் பொருள் இன்னும் சிங்கப்பூருக்குள் கடத்தப்பட்டு வருவதால், மரண தண்டனை அந்தக் குற்றங்களைத் தடுக்கத் தவறிவிட்டது என்று நேர்மையற்ற விவாதத்தில் ஈடுபடுகின்றனர் அல்லது விவாதம் செய்ய வேண்டும் என்பதற்காக பேசுகின்றனர்," என்று திருவாட்டி டியோ மேலும் கூறினார்.