உணவு விநியோக ஊழியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர், மருத்துவ கவனிப்பு தேவைப்படும் வகையில் குறைந்தது ஒருமுறையேனும் விபத்தில் சிக்கினர். குறிப்பாக, நீண்ட நேரம் வேலை செய்தோரும் அதன்மூலம் அதிக ஊதியம் ஈட்டியோரும் விபத்தில் சிக்க அதிக வாய்ப்பிருந்ததாகக் கூறப்பட்டது.
இவ்வாண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கொள்கை ஆய்வுக் கழகம் உணவு விநியோக ஊழியர்கள் 1,002 பேரிடம் கருத்தாய்வு நடத்தியது. அவர்களில் 16.1 விழுக்காட்டினர், மருத்துவ உதவி தேவைப்படும் அளவிற்குத் தாங்கள் விபத்தில் சிக்கியதாகத் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட 9.4 விழுக்காட்டினர் அத்தகைய இரண்டு விபத்துகளை எதிர்கொண்டதாகவும் 7 விழுக்காட்டினர் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை அத்தகைய விபத்தில் சிக்கியதாகவும் கூறினர்.
வாரத்திற்கு 51 மணி நேரம் அல்லது அதற்குமேல் வேலை செய்த உணவு விநியோக ஊழியர்களில் 38.3 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு விபத்தில் சிக்கியது கழகத்தின் ஆய்வுமூலம் தெரியவந்தது.
இந்தப் புள்ளிவிவரங்கள் கவலையளிப்பதாக உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறினர்.
கடந்த மாதம் விநியோகத்தள ஊழியர்கள் கிட்டத்தட்ட 60 பேரிடம் நடத்தப்பட்ட அதிகாரபூர்வமற்ற கருத்துக்கணிப்பு முடிவும் இதை எதிரொலிப்பதாக அமைந்தது.
அப்போது, பத்தில் ஆறு பேர் பணியின்போது காயமடைந்ததாகத் தெரிவித்தனர்.
முன்னதாக, விநியோகத்தள ஊழியர்களின் மேம்பட்ட பாதுகாப்பிற்காக மனிதவள அமைச்சு கடந்த 2021ஆம் ஆண்டு ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்தது. பணியின்போது காயமடைந்தால் அவர்களுக்கு மேம்பட்ட நிதிப் பாதுகாப்பை வழங்கும் வகையில் அவர்களையும் பணிக்காலக் காய இழப்பீட்டுச் சட்டத்தின்கீழ் கொண்டுவரலாமா என்பது குறித்து அக்குழு ஆராய்ந்து வருகிறது.
இவ்வாண்டு இறுதிக்குள் அக்குழு தனது பரிந்துரைகளை அரசாங்கத்திடம் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.