ஃபேஸ்புக் சமூக ஊடகத் தளத்தை நடத்தும் 'மெட்டா' தொழில்நுட்ப நிறுவனம் உலக அளவில் மேற்கொண்ட ஆட் குறைப்பு நடவடிக்கையில் சிங்கப்பூரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
'லிங்க்ட்இன்' தொழில்தொடர்பு கள் தளத்தில் காணப்பட்ட பதிவுகளின்படியும் தான் பெற்ற தகவல்களின்படியும் சிங்கப்பூரில் குறைந்தது 10 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டிருக்கலாம் என்று காட்டுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
தனது 87,000 ஊழியர்களில் சுமார் 11,000 ஊழியர்களை 'மெட்டா' ஆட்குறைப்பு செய்துள்ளது. சிங்கப்பூரில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோருக்கு அது பற்றி நேற்று காலை மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்ட சிலர், 'லிங்க்ட்இன்' தளத்தில் அது குறித்து பதிவிட்டனர்.
காலையில் வழக்கம்போல அன்றைக்கான மின்னஞ்சல்களைப் பார்த்தபோது ஆட்குறைப்பு செய்யப்பட்டதைத் தெரிவித்த மின்னஞ்சல் வந்திருந்ததாக சியாஹிட் இஸ்மாயில் என்ற ஊழியர் லிங்க்ட்இன் தளத்தில் கூறினார்.
சமூக ஊடகத் தளத்தில் பதிவாகும் புகார்களை விசாரிக்கும் குழுவில் பணிபுரிவதாக அவர் தெரிவித்திருந்தார்.
மெட்டாவின் தென்கிழக்காசிய செய்திப் பங்காளித்துவப் பிரிவுக்குத் தலைவராகப் பணியாற்றிய அலெக்ஸ் ஃபென்பியும் ஆட் குறைப்பு செய்யப்பட்டார். அவர் முதன்முறையாக ஆட்குறைப்புக்கு ஆளானதாகக் கூறினார்.
நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியவர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
'மெட்டா' நிறுவனத்தின் ஆசிய பசிஃபிக் தலைமையகம் மரினா பே நிதி வட்டாரத்தில் அமைந்துள்ளது. 2018ஆம் நிலவரப்படி மெட்டா நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளையில் 1,000க்கும் அதிகமானவர்கள் பணியாற்றினர்.

