சிங்கப்பூரின் வெவ்வேறு சோதனைச் சாவடிகளில் அதிகமான போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் பணியில் அமர்ததப்படுவர் என பிரிவின் புதிய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பல நாடுகளில் போதைப்பொருள் மிக எளிதாகக் கிடைக்கிறது. இவற்றை சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் முயற்சிகள் குறித்து பிரிவின் புதிய இயக்குநராக பதவியேற்றுள்ள திரு சாம் டீயிடம் கேட்கப்பட்டது. சோதனைச்சாவடி அதிகாரிகளுடன் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அணுக்கமாக பணியாற்றுவர் என்று திரு டீ கூறினார். இதன் வழி போதைப் பொருள் கடத்துபவர்களைத் தடுத்து நிறுத்தலாம் என்றார் அவர்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் சிலர் அந்நாடுகளில் தற்செயலாக போதைப்பொருள் எடுத்ததாகத் தகவல்கள் அண்மையில் வெளியாகின. அவர்கள் சாப்பிட்ட உணவு கஞ்சா கலக்கப்பட்டிருப்பதை உணவை உண்ட பின்னர்தான் அவர்கள் உணர்ந்தனர்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் தங்கள் உணவில் கஞ்சா போன்ற போதைப்பொருள் உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என திரு டீ ஆலோசனை வழங்கினார்.