'பயோன்டெக்' மருந்து நிறுவனம் அடுத்த ஆண்டு இறுதியில் சிங்கப்பூரில் அதன் முதல் 'எம்ஆர்என்ஏ' மருந்து உற்பத்தித் தொழிற்சாலை செயல்படத் தொடங்கும் என்று நேற்று உறுதியளித்தது.
துவாஸ் உயிரியல் மருத்துவப் பூங்காவில் தற்போது 'நொவார்டிஸ்' மருந்தாக்க நிறுவனம் உள்ள இடத்தில் அந்தத் தொழிற்சாலை அமையும்.
ஜெர்மனியைச் சேர்ந்த 'பயோன்டெக்' நிறுவனத்தின் தென்கிழக்காசிய வட்டாரத் தலைமையகமாகவும் அது செயல்படும்.
தொழிற்சாலை முழுமையாகச் செயல்படத் தொடங்கிய பிறகு 2024ஆம் ஆண்டுக்குள் 100க்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகளை அது உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொறியியல், நிதி, தரக் கட்டுப்பாடு, மனிதவளம், விநியோகச் சங்கிலி நிர்வாகம் போன்ற துறைகளுக்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
சிங்கப்பூர் புவிசார் அரசியல்ரீதியாக மத்திய பகுதியில் இருக்கிறது. சிறந்த விநியோக நடுவமாக விளங்கும் இங்கு திறனாளர், உள்கட்டமைப்பு போன்றவை சிறப்பாக இருப்பதால் சிங்கப்பூரைத் தேர்வு செய்தோம் என்று நிறுவனத்தின் தலைமைச் செயலாக்க அதிகாரி டாக்டர் சியெர்க் பொயட்டிங் கூறினார்.
சிங்கப்பூர்த் தொழிற்சாலையில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான 'எம்ஆர்என்ஏ' தடுப்பு மருந்துகள் மட்டுமன்றி, புற்றுநோய்க்கான தடுப்பு மருந்துகள் போன்றவற்றையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் கூறியது.

