தேசிய பூங்காக் கழகம், சுவா சூ காங் நகர மன்றம் ஆகியவற்றின் ஊழியர்கள் இணைந்து நேற்று சுவா சூ காங் வீடமைப்புப் பேட்டையில் தொந்தரவாக விளங்கிய நூற்றுக்கணக்கான கிளிகளைப் பிடித்தனர்.
பிடிக்கப்பட்ட பறவைகளில் ஏறக்குறைய 60 விழுக்காட்டுப் பறவைகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவை அனைத்தும் சிங்கப்பூரைத் தாயகமாகக்கொண்ட பறவைகள் அல்ல என்பதாலும் இங்கு இவற்றின் எண்ணிக்கை பெருகிவிட்டது என்பதாலும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பறவைகள் கடந்த 30 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் காணப்படுவதாகக் குடியிருப்பாளர்கள் சிலர் கூறினர். முன்பெல்லாம் மிகப் பெரிய கூட்டமாகப் பறக்கும் இப்பறவைகளின் எண்ணிக்கை, கட்டுப்படுத்தப்படுவதால் குறைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
வெளிநாடுகளில் இருந்து இங்கு செல்லப்பிராணிகள் வர்த்தக நடவடிக்கைகளால் கொண்டுவரப்பட்ட கிளிகள் இங்குள்ள கிளிகளுடன் உணவுக்குப் போட்டியிடுவதோடு பொதுமக்களுக்கு இவை எழுப்பும் சத்தம் இடையூறாக இருப்பதாகவும் தேசிய பூங்காக் கழகம் கூறியது.

