நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) 218 மாணவர்கள், தேர்வுத்தாள் ஒன்று முன்கூட்டியே இணையத்தில் வெளியானதையடுத்து, மீண்டும் தேர்வு எழுத நேரிட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலோர் உளவியல் பாடம் பயில்பவர்கள்.
இம்மாதம் 7ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, இந்தத் தேர்வு இருவகையாக நடைபெற்றது.
பெரும்பாலான மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் நேரடியாக அமர்ந்து தேர்வை எழுதிய வேளையில், கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சில மாணவர்கள் இணையம்வழி தேர்வை எழுதினர்.
இருப்பினும் தேர்வு நேரத்துக்கு முன்பாகவே மாணவர்களின் கற்றல் இணையத்தளத்தில் அந்தத் தேர்வுத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதைப் பல்கலைக்கழகம் பின்னர் கண்டறிந்தது.
மீண்டும் தேர்வு எழுத நேரிட்டு உள்ள மாணவர்களிடம் மன்னிப்புக் கோரிய நிர்வாகம், அனைவருக்கும் நியாயமான நடைமுறையைப் பின்பற்றவேண்டியிருப்பதைச் சுட்டியது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதனை ஏற்றுக்கொண்டிருப்பதாக வும் மறு தேர்வுக்கான நாள் குறித்து அவர்களுடன் கலந்தாலோசிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தேர்வு நடைமுறைகளை முழுமையாக மறுஆய்வு செய்து, வருங்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உறுதி அளித்தது.

