2027ல் கட்டி முடிக்கப்படும் ஜூரோங் ஈஸ்ட் ஒருங்கிணைந்த மையத்தில் அமையும்
ஜூரோங் வட்டார நூலகம், 2027ல் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ள ஜூரோங் ஈஸ்ட் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்திற்கு இடமாறும்.
அந்தப் புதிய மையத்தில் சமூக மன்றம், விளையாட்டு நிலையம், அலுவலகங்கள், சில்லறை வர்த்தக இடங்கள் எல்லாம் 27 மாடி புளோக் ஒன்றில் இடம்பெற்று இருக்கும்.
அந்த புளோக் பாலம் வழியாக எட்டு மாடிக் கட்டடம் ஒன்றுடன் இணைக்கப்படும்.
ஜூரோங் ஏரி வட்டார உருவாக்கத்தின் அடுத்த கட்ட பணிகள் காரணமாக இப்போதைய பல கட்டடங்கள் பாதிக்கப்படும் என்றும் அந்தக் கட்டடங்களில் ஜூரோங் வட்டார நூலகமும் ஒன்று என்றும் அண்மையில் தகவல்கள் வெளியாயின.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் அந்தச் செய்தி வெளியானதை அடுத்து அந்த நூலகத்தை இடம் மாற்ற வேண்டாம் என்று விரும்பிய இரண்டு வாசகர்கள், அதன் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைப் பரிசீலிக்கும்படி நகர மறுசீரமைப்பு ஆணையத்தைக் கேட்டுக்கொண்டனர்.
அதற்குக் கடிதம் மூலம் பதிலளித்த அதிகாரிகள், 2028 முதல் புதிய இடத்தில் செயல்படவிருக்கும் நூலகம் மக்களுக்குப் பெரும் வசதியாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.
ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்தில் நூலகம் அமைந்திருக்கும் என்பதால் அங்கு சென்று வருவது மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்றும் அதிகாரிகள் விளக்கினர்.
புதிய இடத்திற்கு மாறும் நூலகம், இப்போதைய நூலகத்தின் அளவுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருக்கும் என்றும் அதிகாரிகளின் கடிதம் விளக்கியது.
இப்போதைய நூலகம் 1988ல் ஜூரோங் ஈஸ்ட் சமூக நூலகமாகத் திறக்கப்பட்டது.
பிறகு புதுப்பிப்பு வேலைகள் நடந்தன. 2004 ஜூன் மாதம் சிங்கப்பூரின் மூன்றாவது வட்டார நூலகமாக அந்த நூலகம் திறக்கப்பட்டது. நான்கு மாடிகள், கீழ்த்தளம் ஆகியவற்றில் 12,020 சதுர மீட்டர் பரப்பளவுடன் கூடியதாக அந்த நூலகம் இருக்கிறது.
அதையும் இதர சமூக வசதிகளையும் போக்குவரத்து மையத்தில் அமைப்பதால் மேற்கு வட்டாரத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்குச் சேவையாற்றத் தோதாக, பெரும் போக்குவரத்து வசதியுடன் கூடிய சமூக மையம் உருவாக வழி பிறக்கும் என்று அதிகாரிகள் கடிதத்தில் கூறினர்.
புதிய போக்குவரத்து மையத்தின் கட்டுமானப் பணிகள் 2021ல் தொடங்கி நடந்து வருகின்றன.

