இரண்டாவது முறையாக கொவிட்-19 தொற்று ஏற்படுவோருக்கு உறுப்பு செயல் இழக்கும் ஆபத்தும் மரண ஆபத்தும் அதிகம் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது.
ஆனால் இதை சிங்கப்பூர் வல்லுநர்கள் மறுத்துள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் மருத்துவத் துறையும் செயிண்ட் லூயிஸ் ஹெல்த் கேர் சிஸ்டம் என்ற அமைப்பின் வெட்டரன் 2 அஃபயர்ஸ் என்ற பிரிவும் அந்த ஆய்வை நடத்தின.
மொத்தம் 5.8 மில்லியன் நோயாளிகளில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமுறை தொற்றுக்கு ஆளான கிட்டத்தட்ட 41,000 நோயாளிகளையும் முதல் தடவை தொற்றுக்கு ஆளான 444,000 நோயாளிகளையும் உள்ளடக்கி ஆய்வு நடத்தப்பட்டது.
புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆய்வாளர்கள் தங்கள் முடிவைச் செய்தனர். மீண்டும் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு மரண ஆபத்து, முதல் முறை தொற்றியோருடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகம் என்று அவர்கள் கூறினர்.
அதேபோல் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறவேண்டிய தேவையும் அவர்களுக்கு மூன்று மடங்கு அதிகம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.
இது பற்றி கருத்து தெரிவித்த சிங்கப்பூரின் டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் தொற்றுநோய் வல்லுநர் பேராசிரியர் ஊய் எங் யோங், தோற்றுநோயுடன் தொடர்புடைய நாள்பட்ட நோய்கள் பற்றி அமெரிக்க ஆய்வில் அவ்வளவாக தகவல்கள் இல்லை என்றார்.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் மூத்த தொற்றுநோய் ஆலோசகர் பேராசிரியர் பால் தம்பையா, அந்த அமெரிக்க ஆய்வின் முடிவில் பெரும் பிரச்சினைகள் இருப்பதாகக் கூறினார்.
மீண்டும் தொற்றுக்கு ஆளாவோருக்கும் முதல் முறை தொற்றுக்கு ஆளாவோருக்கும் இடையில் அதிக வேறுபாடு உண்டு என்று தெரிவித்தார்.
அதேபோல், அமெரிக்க ஆய்வு முடிவுகள் பற்றி கருத்து கூறிய தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் மூத்த தொற்றுநோய் ஆலோசகர் பேராசிரியர் டேல் ஃபிஷர், அந்த ஆய்வறிக்கை குழப்புவதாகக் கூறினார்.
இருந்தாலும் அந்த அமெரிக்க ஆய்வு சரியான நேரத்தில் ஓர் அம்சத்தை நினைவூட்டுகிறது என்றார் அவர்.
அதாவது, கொவிட்-19 தொற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை அது வலியுறுத்துகிறது.
குறிப்பாக கடுமையான நோய் ஆபத்து உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வு நினைவூட்டுகிறது என்றார் அவர்.

