தர்மன்: உரசல் இருந்தாலும் தனித்தனிப் பாதையில் செல்லாத வரை பாதுகாப்பானது
முரண்பாடு இல்லாத அமெரிக்க-சீன உறவு என்பது ஓரளவுக்கு சாத்தியமில்லாமல் போகலாம் என்ற போதிலும் அதன் காரணமாக உலகப் பொருளியல் இரண்டாகப் பிளவுபட்டுவிடாது என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் '2022 புளூம்பர்க் புதிய பொருளியல் மாநாட்டில்' பங்கேற்று உரையாற்றிய அவர், அமெரிக்க-சீன பொருளியல் நிலவரம் குறித்து பேசினார்.
"வர்த்தகம், முதலீடு, தரவுகள், பணம் செலுத்துதல், நிதி முறை, அறிவார்ந்த சொத்து உருவாக்கம் போன்றவற்றில் அமெரிக்காவும் சீனாவும் தனித்தனிப் பாதையில் செல்வதாக நாம் கற்பனை செய்து பார்த்தால், அந்தப் போக்கு உலகிற்கு மிகுந்த ஆபத்தானது என்பதை உணரமுடியும்.
"உலக நாடுகளிடையே பல
தரப்பட்ட முரண்பாடுகள் காணப்பட்டாலும் அது, ஒவ்வொன்றும் தனித்தனியே செல்வதைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பானது," என்றார் திரு தர்மன்.
இந்தோனீசியாவின் பாலித் தீவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் நேரடியாகச் சந்தித்துப் பேசியதற்குப் பின்னர் திரு தர்மனின் கருத்து வெளியாகி உள்ளது.
ஈராண்டுகளுக்கு முன்னர் திரு பைடன் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற பின்னர் சீன அதிபரை நேரடியாகச் சந்தித்திருப்பது இது முதல்முறை.
பருவநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு போன்றவை உள்ளிட்ட விவகாரங்களில் ஒத்துழைப்பை மீட்க, அந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் இணங்கினர்.
மிகவும் அவசியமான புதிய தொடக்கம் என்று இந்தச் சந்திப்பை திரு தர்மன் வர்ணித்தார். மேலும், கொவிட்-19 கொள்ளைநோயி
லிருந்து மீண்டு, பணவீக்கத்துடன் போராடி வரும் உலகின் பொருளியல், வளர்ச்சிப் பாதையில் செல்ல நீண்டகால அடிப்படையில் உதவக்கூடியது இந்தச் சந்திப்பு என்றும் அவர் கூறினார்.
பாலியில் நடைபெறும் ஜி20 உச்சநிலைக் கூட்டத்தில் நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இருதரப்பு உறவுகளின் தடுமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, உறவை நிலைப்
படுத்துவதில் அமெரிக்காவும் சீனாவும் நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறினார்.
2018ஆம் ஆண்டு முதலே அமெரிக்க-சீன உறவில் உரசல் நிலவி வருகிறது. இறக்குமதித் தீர்வை விவகாரத்தில் இரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டன. அண்மையில்கூட சிலவகை நவீன பகுதி-மின்கடத்தித் தொழில்நுட்பங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்திருந்தது.
இதனைக் குறிப்பிட்டு நேற்று புளூம்பர்க் மாநாட்டில் பேசிய திரு தர்மன், "அமெரிக்கா-சீனா இடையிலான பதற்றம் குறைந்தாலும் அமைதி நிலைப்படுமா என்று உறுதியாகக் கூறுவதற்கில்லை. ஆயினும் பதற்றம் குறைந்த சூழல் உலகிற்கு அமைதியைத் தரும்," என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்த விவகாரத்தில் இதுவரை உச்சத்தைத் தொட்டுவிடவில்லை; முன்னோக்கிச் செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது.
"நிச்சயமற்ற நிலைக்கு இடையே உலகின் அடிப்படைத்தன்மையை நாம் பார்க்க வேண்டும். நினைத்ததைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட நிலைக்கு எதுவும் மாறலாம் என்று எதிர்பார்க்க வேண்டும்.
"தவறு நிகழக்கூடும் என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்து, அந்தத் தவறு நேராமல் தடுக்க முயலவேண்டும்," என்று விளக்கினார்.
உலகப் பொருளியல் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள், அச்சுறுத்தல்களில் இருந்து மீள அமெரிக்க-சீனத் தலைவர்களின் சந்திப்பு நீண்ட காலத்திற்கு உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிங்கப்பூரில் நேற்று தொடங்கிய புளூம்பர்க் பொருளியல் மாநாடு நாளை வரை தொடரும்.
உலகின் 53 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தலைசிறந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் இந்த மூன்று நாள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

