நாடகங்கள் பிறப்பதற்கான உந்து
தலாக கவிதைகளின் களமும் காட்சிப் படிமங்களும் விளங்குகின்றன. அதே சமயம், ஷேக்ஸ்பியர் போன்ற நாடக மேதைகளின் படைப்புகள் இருப்பதுபோல, மேடை தனிப்பேச்சுகளில் கவிநயம் நெய்யப்படுவது வழக்கமாகிவிட்டது.
இப்படி, கவிதைக்கும் நாடகத்துக்குமான ஆழமான பிணைப்புகளை ஆராய்ந்தது, பிரபலக் கவிஞரும் நாட்டுப்புறவியல் அறிஞருமான திரு எம்.டி. முத்துக்குமாரசாமியுடன் நிகழ்ந்த 'கவிதை எனில், நாடகம்?' உரையாடல்.
'கவிமாலை சிங்கப்பூர்' இணைந்து படைத்த 'கவிதை எனில், நாடகம்?' நிகழ்வு நவம்பர் 6ஆம் தேதி சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் நடந்தேறியது. திரு முத்துக்குமார
சாமியின் சிறப்புரை, அவரின் 'சாகசப் பிழை' கவிதையை ஒட்டி திருமதி ராணி கண்ணா படைத்த நவீன நாடகம், கவிஞருடனான கலந்துரையாடல் என பல அங்கங்கள் அடுத்தடுத்து இடம்பெற்றன.
கவிதைகளிலிருந்து நாடகங்கள் பிறப்பது குறித்து அதிகம் பேசப்
படுவதில்லை என்று கூறிய திரு முத்துக்குமாரசாமி, கவிதைகளின் கருப்பொருள்களும் வடிவங்களும் நாடகங்கள் உருவாக தளங்கள் ஏற்படுத்தித் தருகின்றன என்றார்.
"கவிதைகளில் இடம்பெறும் முகமற்ற கதாபாத்திரங்கள் தொடர்பு கொண்டு உரையாடுகின்றன. அத்தகைய கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பின்புலங்களை அளிக்கின்றனர் வாசகர்கள். அவற்றுக்குப் பல்வேறு வகைகளில் உணர்வூட்டும்போது, நாடகங்கள் பிறக்கின்றன," என்றார் கவிஞர்.
மனிதர்களின் அந்தரங்க உணர்வுகளை இயற்கையின்மீது ஏற்றிச் சொல்வது, சங்க இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட வரப்பிரசாதம் என குறிப்பிட்ட அவர், இன்று வரைக்கும் தொடரும் அந்த பாரம்பரியத்தினால் பல கோணங்களில் காட்சிப்படுத்துவது சாத்தியமாகியுள்ளது என்றார்.
கவிதை, நாடகம் ஆகியவற்றில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர், கலந்துரையாடலில் பங்கேற்ற திருமதி ராணி கண்ணா, திரு க. செல்வநாதன், திரு முத்துக் குமாரசாமி ஆகியோர்.
அம்பிகாபதி, அமராவதியைத் தழுவிய 'பதிவதி ஒரு காதல்' கவிதை நாடகத்தை 1999ல் தாம் இயக்கியதை நினைவுகூர்ந்த திரு செல்வநாதன், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, இறுதிக்காட்சியில் இடம்பெறவேண்டிய நூறு பாடல்களை மாற்றி, நூறு செய்திகள் கொண்ட ஒரு பாடல் புனைந்ததை சுட்டினார்.
இவ்வகையில், நவீன, வேறுபட்ட முறையில் படைக்கப்படும் கவிநயமானது நாடகங்களில் புகுத்தப்
படும்போது அது பல்வேறு வயதினரையும் கவரவல்லது என்ற கருத்தை கலந்துரையாடல் வலியுறுத்தியது.

