தமிழையும் ஆங்கிலத்தையும் தம் அடையாளத்தின் அங்கங்களாகக் கருதும் சித்தர்த் என்ற ராம
கிருஷ்ணா கே, அதையே தம் இசையிலும் வெளிப்படுத்த விரும்பினார்.
உள்ளூர் இசைக்கலைஞரான இவர், 'பறவைகள்' என்ற 'பாப்' பாடலை இசைக் காணொளியாக வெளியிட்டுள்ளார். 'நினைவுகள்' என்ற கருப்பொருளில் அமைந்த இந்தப் பாடல், இவ்வாண்டு செப்டம்பர் மாதம் சமூக ஊடகங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது.
"சிங்கப்பூர் சூழலில் ஆங்கிலம் என்பது நமது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கம். அதே நேரம் தமிழ் இசையைக் கேட்டு, தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து, வளர்ந்த நான், எனது தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்க விரும்பினேன்," என்று கூறினார் 29 வயது சித்தர்த்.
நினைவுக்கும் நிஜத்திற்கும் இடையே சித்தர்த்தின் மனம் சிக்கிக்கொண்ட விதமாக அமைந்த காணொளியை ஷாரிக் ஃபாரூக் இயக்கியிருந்தார். அத்துடன் ஆதித்யா மாணிக்கஷெட்டி வடி
வமைப்பில் சிறப்புக் காட்சியமைப்பு உத்திகளும் கையாளப்பட்டன.
"இன்றைய மின்னிலக்க உலகில், நினைவுகள் என்பவை ஒரு 'ஸ்வைப்' தொலைவில் உள்ளது. நம் நினைவுகளும் எப்போதும் உண்மையைச் சித்திரிப்பதில்லை. ஒரு தனிமனிதன் அனுபவிக்கும் முரண்பட்ட நினைவுகளை ஒருவரின் மனம் எப்படி வேறு கோணத்தில் சித்திரிக்கிறது என்பதைக் காட்ட எண்ணினேன்," என்றார் சித்தர்த். பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்னும் மூன்று பரிமாணங்களைக் கொண்ட சித்தர்த், 'பிறந்தேன்' என்னும் தமது முதல் பாடலை 2020ல் வெளியிட்டார். 16 வயதிலிருந்தே இசை அமைக்கத் தொடங்கிய இவர், 'ஹிப்-ஹாப்', 'ராக்', 'எலக்ட்ரானிக்', இந்திய திரைப்பட இசை, இந்திய பாரம்பரிய இசை ஆகியவற்றிலிருந்து தம் சொந்த இசையை உருவாக்கினார்.
சிறு வயதிலிருந்தே சொந்தமாக இசையமைக்கத் தொடங்கிய பின்னர், 'சங்கே முழங்கு', 'கலா உட்சவம்' ஆகிய தயாரிப்புகளிலும் கவிதை நிகழ்ச்சிகளிலும் இசையமைக்க ஆரம்பித்தார்.
உலகத் தமிழர்களைத் தம் இசை சென்றடைய வேண்டும் என்று விரும்பும் சித்தர்த், வரும் ஆண்டுகளில் பல இசைப் படைப்புகளை வெளியிட இலக்கு கொண்டுள்ளார்.

