மனைவிகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது பற்றி கற்பனை செய்த கணவர்கள், மனைவிகளுக்கு மயக்க மருந்து தந்து பாலியல் வன்புணர்வு செய்ய மற்ற ஆடவர்களுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினர்.
அந்த வழக்கில் தொடர்புள்ள ஏழு பேரில் நான்கு பேருக்கு புதன்கிழமை (நவ. 16) அன்று பதிமூன்றரை ஆண்டுகளிலிருந்து 22 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
அவர்களில் மூன்று பேருக்கு 20 பிரம்படிகள் கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். நால்வரில் ஒருவருக்கு 50 வயதுக்கு மேல் ஆவதால், அவருக்கு பிரம்படி தர முடியாது.
பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாப்பதற்காக, அந்த ஆடவர்களின் பெயர் விவரங்களை வெளியிட முடியாது.
நீதிமன்றம் கண்ட மிகவும் அதிர்ச்சியூட்டும், கோரமான பாலியல் வன்புணர்வு வழக்குகளில் இதுவும் ஒன்று, என்று நீதிபதி பாங் காங் சாவ் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் கூறினார்.
இன்று தண்டனை விதிக்கப்பட்ட நால்வர்
தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில், கே, எல், எம் என்ற மூன்று பேர், வேறு ஆடவர் தத்தம் துணைகளை நெருங்க அனுமதித்தனர்.
மயக்கமாகி இருந்த அந்தப் பெண்களை அந்த ஆடவர் பாலியல் வன்புணர்வு செய்தபோது அல்லது வன்புணர்வு செய்ய முயன்றபோது அவர்கள் பார்த்தனர்.
அவர்களில் இருவரான கே மற்றும் எல், தங்கள் துணைகள் வன்புணர்வு செய்யப்பட்டதைப் படம் எடுத்தனர். அப்படங்களையும் காணொளிகளையும் மற்ற ஆடவர்களுடன் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
கே, எல், எம் ஆகிய மூன்று பேரும் நான்காவதாக என் என்ற ஆடவருடனும் ஜே என்ற ஆடவருடனும் ஆட கூட்டுச்சதி தீட்டினர்.
என் என்ற ஆடவருக்குத் திருமணமாகவில்லை.
ஐந்தாவது நபருடன் கூட்டுச் சதி
இவர்கள் அனைவரும் சேர்ந்து ஜேயின் மனைவியை 2010 முதல் 2018 வரை வன்புணர்வு செய்ய சதித் திட்டம் தீட்டினர்.
இந்த வழக்கில் தொடர்புள்ள ஏழு பேரில், ஆடவர் ஜே ஆக அதிகமான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
அவர் வழக்கு இன்னமும் விசாரணைக்கு வரவில்லை.
இணையத்தளங்களில் ஏற்பட்ட அறிமுகம்
துணைகளையும் மனைவிகளையும் பகிர்ந்துகொள்ள வகை செய்யும் இணையத் தளங்களில் அந்த ஆடவர்கள் சந்தித்துக் கொண்டனர்.
தம் மனைவியுடன் வேறு ஆடவர் பாலியல் உறவு கொள்வதைப் பார்க்கும் கற்பனைகள் இருப்பதாக அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
தத்தம் மனைவியாருடனான பாலியல் அந்தரங்க விவரங்களையும் அது பற்றிய புகைப்படங்களையும் காணொளிகளையும் ஆடவர்கள் பரிமாறிக் கொண்டனர்.
சிலர் தங்கள் மனைவியுடன் பாலியல் உறவு கொள்வதை மற்றவர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்தனர்.
குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன
ஆடவர் ஜேயின் கைபேசியில் தமது அந்தரங்கப் படங்கள் இருப்பதை அவரது மனைவி கண்டுபிடித்தபோது அக்குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
அத்துடன் தமது கணவரும் கேயும் 'மனைவிகளைப் பகிர்ந்துகொண்டனர்' என்றும் அவருக்குத் தெரிய வந்தது.

