புகழ்பெற்ற 20 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதல்முறையாக 'என்யுஎஸ்'
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) முதல்முறையாக உலகின் புகழ்பெற்ற 20 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. நேற்று வெளியான 'டைம்ஸ் உலகப் புகழ்பெற்ற உயர்கல்வி நிலையங்கள்' பட்டியலில் 'என்யுஎஸ்' 19வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக அது 24வது இடத்தில் இருந்தது. அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
சிங்கப்பூரர்களுக்கான அரசாங்கச் சேவைகளில் 99% மின்னிலக்கமயம்
அரசாங்க அமைப்புகளுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் இடையிலான 99 விழுக்காட்டுப் பரிவர்த்தனைகளைத் தற்போது மின்னிலக்க முறையில் செய்ய இயலும். சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 'ஸ்டேக் 2022' இணையத் தொழில் நுட்ப மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஜோசஃபின் டியோ இதனைத் தெரிவித்தார். முன்னதாக, அடுத்த ஆண்டுக்குள் 95 விழுக்காட்டுப் பரிவர்த்தனைகளை மின்னிலக்கப்படுத்த அரசாங்கம் இலக்கு கொண்டிருந்தது.
பாட்டாளிக் கட்சி செயற்குழுவில் மூன்று புதிய நியமனங்கள்
பாட்டாளி கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு மூவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரு பொருளாளராக நியமிக்கப்பட்டதையடுத்து நெதனியல் கோ துணைப் பொருளாளராகவும் ஆங் பூன் யாவ், டான் கோங் சூன் இருவரும் துணை ஏற்பாட்டுச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயணிகள் குழப்பத்தால் விமானத்தை தரையிறக்க மறுத்த ஸ்கூட் விமானி
இந்தோனீசியாவின் பாலித் தீவிலிருந்து சிங்கப்பூர் வந்த ஸ்கூட் விமானம் டிஆர்285ல் பயணிகள் சிலர் செய்த குழப்பத்தால் விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த திங்கட்கிழமை சாங்கி விமானத்தில் தரையிறங்குவதற்கு முன்னர் பயணிகள் சிலர் விமான இருக்கை-வாரைப் பொருத்திக்கொள்ள மறுத்தனர். இதையடுத்து தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டதுடன் விமானி அதுகுறித்துப் பயணிகளுக்கு விளக்கம் அளித்தார்.

