மதிநுட்பக் குறைபாடு உள்ளோருக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் சேவை வழங்கும் புதிய நிலையம் குவீன்ஸ் ரோட்டில் திறக்கப்பட்டுள்ளது.
'மைண்ட்ஸ் ஹப்' எனும் இந்த நிலையத்தில் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளும் நோய்களைக் கண்டறியும் சேவை, மதிப்பீட்டுச் சேவை, வேலைவாய்ப்பு ஆதரவு உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படும்.
மதிநுட்பக் குறைபாடு உள்ளோரைப் பராமரிப்பவர்கள் தங்களைப்போலவே இச்சேவையில் ஈடுபட்டுள்ள மற்றவர்களுடன் கலந்து பழக இது வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது.
அவர்கள் நட்பு வட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் நிதித் திட்டமிடலுக்குத் தேவையான ஆதரவை வழங்கவும் இது வகைசெய்யும்.
பாதிக்கப்பட்டவர் சார்பில் அவரது பராமரிப்பாளர் சட்டரீதியான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு இதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, அடுத்த ஈராண்டுகளில் இத்தகைய மேலும் இரண்டு நடுவங்களைத் திறக்கவிருப்பதாகக் கூறப்பட்டது.
நடுவத்தின் திறப்புவிழாவில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கலந்துகொண்டார்.
இத்தகைய நடுவம், மதிநுட்பக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளோர் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே தேவைப்படும் சேவைகளைப் பெறுவதில் முக்கியப் பங்காற்றுவதாக அமைச்சர் மசகோஸ் தமது சிறப்புரையில் குறிப்பிட்டார். அவர்கள் மற்றவர்களை அதிகம் சார்ந்திருக்காமல் வாழவும் சமுதாயத்தில் துடிப்புடன் பங்கெடுக்கவும் இத்தகைய நடுவம் வகைசெய்வதாக அமைச்சர் கூறினார்.
சேவைகளை ஒருங்கிணைப்பது குறித்தும் உடற்குறையுள்ள மூத்தோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்தும் பராமரிப்புச் சேவை வழங்குவோரும் உடற்குறையுள்ளோருக்கு உதவும் தொழில்முறை நிபுணர்களும் கருத்துரைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

