சிங்கப்பூரில் மீண்டும் கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்படமாட்டா. ஏனெனில் இந்தக் கிருமியுடன் வாழ்வதற்கு சிங்கப்பூர் வெற்றிகரமாகப் பழகிக்கொண்டுள்ளது என்று வல்லுநர்கள் கருத்துரைத்து உள்ளனர்.
கொவிட்-19 கிருமியின் புதிய திரிபுகள் தொடர்ந்து கண்டறியப்படுவதுடன் இந்தக் கிருமியை முற்றிலும் அழிக்க இயலாது என்று கருதப்படும் வேளையில் வல்லுநர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிதல், பாதிக்கப்பட்டோரின் தொடர்புத் தடங்களைக் கண்டறிதல், சில இடங்களுக்கு தடுப்பூசிச் சான்றிதழ் அடிப்படையிலான அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டில் விலக்கப்பட்டன.
இம்மாதம் 7, 8ஆம் தேதிகளில், அன்றாட கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடும் நடைமுறை நிறுத்தப்பட்டதுடன் மருத்துவமனைகள் முழு சிகிச்சைப் பிரிவையும் கொவிட்-19 நோயாளிகளுக்காக இனி ஒதுக்கத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது.
நாடு வழக்கநிலைக்குத் திரும்புவதை இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு அப்பால் நீரிழிவு நோயும் உலகளாவிய நிலையில் அதிகரிக்கும் காசநோயும் அதிக கவனம் செலுத்தப்படவேண்டியவை என்பதை வல்லுநர்கள் சுட்டினர்.
மீண்டும் கொரோனா கிருமிப் பரவல் ஏற்பட்டாலும் பாதிப்பு தீவிரமாக இருக்காது என்று அவர்கள் கூறினர். சளிக்காய்ச்சலைப்போலவே கொவிட்-19 கிருமியையும் சிங்கப்பூரில் இருந்து முற்றிலும் அழிக்கமுடியாது என்பதை வல்லுநர்கள் நினைவுபடுத்தினர்.

