குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவளிப்பர்
மாதங்கி இளங்கோவன்
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோர் இனி 24 மணி நேரமும் சமூக சேவை நிபுணர்களிடம் உதவிநாடலாம். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செயல்பாட்டிற்கு வரும் தேசிய வன்முறைத் தடுப்பு அழைப்பு எண் மூலமாக அது சாத்தியமாகும்.
இதன்பொருட்டு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சைச் சேர்ந்த சமூக சேவை நிபுணர்கள், காவல்துறையுடன் இணைந்து செயல்படுவர். பாதிக்கப்படுபவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் நிகழ்விடத்திலேயே அவசரகாலப் பாதுகாப்பு ஆணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்படும்.
துன்புறுத்தலில் இருந்து குழந்தைகளையும் முதியோரையும் பாதுகாப்பது தொடர்பில் ஏற்கெனவே ஒரு குழு பணியாற்றி வருகிறது. துன்புறுத்தலை எதிர்கொள்ளும் வாழ்க்கைத்துணைகளையும் பாதுகாக்கும் வகையில் அது விரிவுபடுத்தப்படும்.
குடும்ப வன்முறையை எதிர்கொள்ள 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள நடவடிக்கைகளில் இவை அடங்கும் என்று நேற்று நடந்த ஒரு கருத்தரங்கில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்தார்.
பூன் லேயில் உள்ள 'தி செவ்ரான்ஸ்' கேளிக்கை மன்றத்தில் நடந்த அக்கருத்தரங்கில் குடும்ப வன்முறைச் சம்பவங்களை எதிர்கொள்ள எடுத்துவரும் முயற்சிகளுக்காக 11 சமூக சேவை நிபுணர்களுக்கும் அமைப்புகளுக்கும் 'குடும்ப வன்முறை கலந்துரையாடல் குழு' அங்கீகார விருதுகள் வழங்கப்பட்டன.
குழு பிரிவில் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் (சிண்டா) விருது கிடைத்தது.
சிண்டாவைப் பிரதிநிதித்து விருதைப் பெற்றுகொண்ட திரு ரவீந்திரன் சதானந்தன், 52, கடந்த ஏழரை ஆண்டுகளாக மூத்த துணை ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். தம் பல்லாண்டுகால அனுபவத்தில் பல்வேறு குடும்ப வன்முறைச் சம்பவங்களைக் கண்டுள்ள இவர், அவற்றால் பெரும்பாலும் பாதிப்படைவது பெண்களும் பிள்ளைகளும்தான் என்றார்.
"சிலர் தங்களது குடும்ப வன்முறைக் கதைகளை கிராப் வாகன ஓட்டுநர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது அவ்வோட்டுநர்கள் குடும்ப சேவை நிலையங்கள் அல்லது சிண்டா போன்ற அமைப்புகளை நாட ஊக்குவிப்பதாகக் கேள்விப்பட்டபோது நான் வியப்படைந்தேன். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு வெவ்வேறு வழிகளில் உதவுவதில் பொதுமக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு," என்றார் திரு ரவீந்திரன்.
சிண்டா உள்ளிட்ட விருது வென்ற மூன்று அமைப்புகளும் கடந்த ஆண்டு குடும்ப வன்முறையில் சிக்கிய 230 குடும்பங்களுக்கு உதவின.

