சிங்கப்பூரரான 58 வயது ஆர்னி மோவானி, தனது இந்தோனீசியப் பணிப்பெண்ணைத் துன்புறுத்தியது தொடர்பிலான மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதையடுத்து நேற்று அவருக்கு ஒன்பது மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பணிப்பெண்ணான 46 வயது திருவாட்டி ரெனி, 2020ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி, உட்லண்ட்சில் இருந்த ஆர்னியின் வீட்டில் இருந்து தப்பித்துக் காவல் நிலையம் சென்றார். அதன்பிறகு இந்தோனீசியத் தூதரகத்தில் அவர் தங்கவைக்கப்பட்டார்.
ஆர்னி தாக்கியதில் ரெனியின் முகத்திலும் முதுகிலும் காயங்கள் காணப்பட்டன. ரெனிக்கு சம்பளமும் முறையாகத் தரப்படவில்லை என்று தெரியவந்தது.
ஆர்னி தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து பணிப்பெண் ரெனிக்கு 4,615 வெள்ளி இழப்பீடு தரும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது.
ஆர்னி வீட்டில் மேலும் ஒரு பணிப்பெண்ணும் வேலைசெய்ததாகவும், அவர் தனிப்பட்ட முறையில் செய்துவந்த 'கறிபஃப்' வியாபாரத்துக்கு உதவும்படி ரெனியும் அந்த பணிப்பெண்ணும் வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
2020ஆம் ஆண்டு செப்டம்பருக்கும் நவம்பருக்கும் இடையில் ஆர்னி பலமுறை ரெனியைக் கிள்ளியதில் ரெனியின் கையில் நிரந்தரத் தழும்புகள் ஏற்பட்டன. ஆர்னிக்கும் மற்றொரு பணிப்பெண்ணான அனிசுக்கும் இடையே எந்தவிதத் தகராறும் இல்லை எனக் கூறப்பட்டது. நேற்று 15,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்ட ஆர்னி, அடுத்த மாதம் 5ஆம் தேதி தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார்.