அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஆகப்பெரிய வாடகை வாகன நிறுவனமான கிராப், மற்றொரு நிறுவனமான பிரைம் டாக்சியை வாங்க முயற்சி செய்து வருகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டில் எஸ்எம்ஆர்டி டாக்சி நிறுவனமும் இதே போன்று விற்கப்படுவதாக பேச்சு எழுந்தது.
இந்த நிலையில் கிராப், பிரைம் டாக்சியை வாங்க விரும்புவதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இரு நிறுவனங்களுக்கும் இடையே இதுவரை ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை.
சிங்கப்பூரில் பிரைம் டாக்சி, ஆகச்சிறிய வாடகை வாகன நிறுவனமாகும்.
ஆனால் 'டொயோட்டா ஆல்ஃபர்ட்' போன்ற மதிப்புமிக்க வாகனங்களையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார கார்களையும் அது வைத்து உள்ளது.
பிரைம் டாக்சியை நடத்தும் பிரைம் குழுமத்தின் தலைவரான நியோ நாம் ஹெங், 2007ஆம் ஆண்டில் வாடகை வாகனச் சேவையை தொடங்கியிலிருந்து 50 மில்லியன் வெள்ளிக்கு மேல் லாபம் சம்பாதித்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இது, சராசரி ஆண்டுக்கு 3.3 மில்லியன் வெள்ளியாகும். இதில் குழுமத்தின் தனியார் வாடகை வர்த்தகம் சேர்க்கப்படவில்லை.
கிராப் தனது நிறுவனத்தை வாங்குவது குறித்து திரு நியோ கருத்து தெரிவிக்கவில்லை.
தான் மறுக்க முடியாத விலை கொடுக்கப்பட்டால் வாடகை வாகனச் சேவையையும் தனியார் வாடகை வர்த்தகத்தையும் விற்கத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
"எங்களுடைய டாக்சி மற்றும் தனியார் வாடகைப் பிரிவு $100 மில்லியனுக்கு மேல் சொத்துகளை வைத்துள்ளது. எங்களுக்கு பெரிதாக கடன் எதுவும் இல்லை. எல்லா நிறுவனங்களையும்போல எங்கள் நிறுவனமும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டது. தற்போது எல்லைகள் திறக்கப்பட்டுள்ளதால் எங்களுடைய டாக்சி வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகிறோம். நாங்கள் எதிர்பார்க்கும் பணம் கிடைக்காவிட்டால் நாங்களே வாடகை வாகனச் சேவையை நடத்துவோம். குறிப்பாக சீனாவிலிருந்து சுற்றுப்பயணிகள் மீண்டும் வருவார்கள் என்பதால் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன," என்று திரு நியோ தெரிவித்தார்.
பிரைம் டாக்சி தனது வர்த்தகத்தை விற்க $100 மில்லியனுக்கு மேல் எதிர்பார்ப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மூலம் அறிய முடிகிறது.
கிராப் நிறுவனத்தை தொடர்புகொண்டு இது குறித்து கேட்டபோது சந்தையில் நிலவும் ஊகங் களுக்கு பதிலளிக்க முடியாது என்று கூறியது.
2017ல், எஸ்எம்ஆர்டி தனது டாக்சி சேவை நிறுவனத்தை கிராப்புக்கு விற்கப் போவதாக பேச்சு எழுந்தது.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏற்பட்ட முட்டுக்கட்டையால் அந்த ஒப்பந்தம் தோல்விஅடைந்ததாகக் கூறப்படுகிறது.

