தங்களுக்காக தூக்க மாத்திரைகளை வாங்கவும் அவற்றை மற்ற கைதிகளுக்குக் கடத்தவும் சிறைக் கைதிகள் நால்வர் சிறை கண்காணிப்பாளர் ஒருவருக்கு $1,200 லஞ்சம் கொடுத்தனர்.
கெல்வின் ஆங் வெய் ஷெங், 39, எனப்படும் அந்த முன்னாள் அதிகாரி கடந்த ஆண்டு செப்டம்பருக்கும் அக்டோபருக்கும் இடைப்பட்ட பகுதியில் லஞ்சம் பெற்ற குற்றம் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
முஹம்மது ஷைஃபுல்லா அப்துல் லத்திஃப், 36, சிடேக் ஜமாலுதீன், 42, ஐரீஸ் ரஹ்மான், 50, மற்றும் இஸ்மாயில் மசூன் முல்லா, 57, ஆகிய நால்வரிடமிருந்தும் அவர் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. அப்போது அவர் நியூ ஹோப் என்னும் உணவு நிறுவனத்தின் கண்காணிப்பாளராக வேலை செய்தார்.
லஞ்சம் பெற்றது, லஞ்சம் கொடுத்தது ஆகியன தொடர்பில் இந்த ஐவர் மீதும் நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
ஆங் மீது ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளும் இஸ்மாயில் மீது இரு ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
இதர மூவர் மீதும் தலா ஒரு லஞ்சக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. நான்கு கைதிகளும் ஆங்கிடம் $200க்கும் $500க்கும் இடைப்பட்ட தொகையை லஞ்சமாகக் கொடுத்தனர்.
ஆங் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு கடந்த ஆண்டு அக்டோபர் தொடக்கத்திலேயே தெரிய வந்ததாக சிங்கப்பூர் சிறைச் சேவை நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தது.
சிறைக் கைதிகளின் அறைகளிலும் பொதுப் பகுதியிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி, மறைத்து வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளைக் கண்டுபிடித்தாக அறிக்கை குறிப்பிட்டது.

