ஆர்ச்சர்ட் சாலையில் ஆண்டிறுதி விழா கொண்டாட்ட காலத்தின்போது மிக அதிக கூட்டம் திரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தச் சூழலில் பொதுமக்கள் பாதுகாப்பைக் கிள்ளுக்கீரையாகக் கருத இயலாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு கூட்டம் அதிகமாகக் கூடக்கூடிய குறிப்பிட்ட சில இடங்களில் வீதி கலை நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கும்படி தேசிய கலைகள் மன்றத்திற்கு காவல்துறை பரிந்துரைத்து இருந்தது.
தென்கொரியாவில் 150க்கும் மேற்பட்ட மக்களைப் பலிகொண்ட கூட்ட நெரிசல் சம்பவம், பொதுமக்கள் பாதுகாப்பை அலட்சியமாகக் கருதக்கூடாது என்பதை நினைவுபடுத்தும் ஒன்றாக இருக்கிறது என்று ஊடகத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறை தெரிவித்தது.
ஆகையால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொருத்தமான நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்று அது வலியுறுத்தியது.
ஆர்ச்சர்ட் சாலையில் வட்டாரத்தில் இருக்கும் ஏழு கடைத்தொகுதிகளுக்கு வெளியே டிசம்பர் 24, டிசம்பர் 31 உள்ளிட்ட குறிப்பிட்ட நாள்களில் வீதி கலை நிகழ்ச்சிகளை நடத்த இயலாது என்று தேசிய கலைகள் மன்றம் தெரிவித்து இருக்கிறது.
இது பற்றி கருத்து கூறிய தெருக் கலைஞர்கள் சங்கம், இந்தத் தடை காரணமாக தெருக் கலைஞர்களுக்கு வருமானம் பாதிக்கப்பட்டுவிடும் என்று கவலை தெரிவித்தது.
சிங்கப்பூரின் மிக முக்கியமான ஆர்ச்சர்ட் சாலை பகுதியில் விழாக்கால கொண்டாட்டங்களுக்கு தெருக் கலைஞர்கள் சுவை சேர்க்கிறார்கள் என்பதை அது சுட்டியது.
இதனிடையே, இந்த ஆண்டில் அளவுக்கு அதிகமான கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட இடங்கள் மூடப்படும் என்றும் அப்போது அது பற்றி பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்த காவல்துறை, அதிகாரிகள் பணியில் இருந்து மக்களுக்கு உதவுவர் என்றும் குறிப்பிட்டது.
அத்தகைய பகுதிகளில் தடைகள் அமைக்கப்படும் என்றும் அது தெரிவித்தது.
சூழ்நிலையைப் புரிந்துகொண்டு தேசிய கலைகள் மன்றம் காவல்துறையோடு சேர்ந்து செயல்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது என்றும் காவல்துறை தெரிவித்தது.

