தேசிய இளையர் மன்றத்தின் முதலாவது பொதுமக்கள் கலந்துரையாடல் அட்டை விளையாட்டு நேற்று தொடங்கியது.
அந்தத் தொடக்க நிகழ்ச்சியின்போது பல சமய, இன பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டன.
'போல்டு அட் ஒர்க்' என்ற கல்வி நிலையம், 'தி ஒயிட்ஹேட்டர்ஸ்' என்ற அரசு சாரா அமைப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து முன்னேறும் சிங்கப்பூர் இயக்க குடிமக்கள் கலந்துரையாடல் அட்டை விளையாட்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
அந்த விளையாட்டு, அனைத்து சமய, இன கலந்துறவாடல்கள் பற்றிய தங்களுடைய கருத்துகளை நேர்மையான முறையில் பகிர்ந்துகொள்ளும் அதேவேளையில், உரிய கவனத்தோடும் மற்றவர்களின் மனப்பாங்கை அறிந்தும் கலந்துரையாடல்களில் எவ்வாறு ஈடுபடலாம் என்பது பற்றி சிங்கப்பூரர்களுக்கு வழிகாட்டும்.
ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் தொடர்பு தகவல், சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி கலந்துகொண்டார்.
சிங்கப்பூரில் சகிப்புத்தன்மைக்கு அப்பாலும் மக்கள் செயல்பட வேண்டி இருக்கிறது என்பதை அவர் தமது உரையில் சுட்டினார்.
சிங்கப்பூருக்குப் பலத்தையும் தேசிய அடையாளத்தையும் ஏற்படுத்தித் தருகின்ற பல கலாசார, பன்முகத் தன்மையைப் புரிந்துகொண்டு அதைப் போற்றிப் பாராட்டும் உண்மையான உணர்வுடன் மக்கள் திகழ வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இனம், சமயம் பற்றிய ஆக்ககரமான கலந்துரையாடல்கள், சிங்கப்பூரர்கள் ஐக்கியமாக ஒன்றாகச் சேர்ந்து முன்னேறுவதற்கு உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்றைய தொடக்க நிகழ்ச்சியில் 18 முதல் 35 வரை வயதுள்ள ஏறக்குறைய 70 பேர் பங்கேற்றனர்.
அவர்கள், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், (சிண்டா) யுரேஷியர் சங்கம் போன்ற சுய உதவிக் குழுக்களையும் இளையர் மனமகிழ் மன்றங்களையும் மாணவர் சங்கங்களையும் சேர்ந்தவர்கள்.
இதனிடையே, சிண்டா, மெண்டாக்கி போன்ற சுயஉதவிக் குழுக்கள் மூலமாகவும் உயர் கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள் கட்டமைப்பு வழியாகவும் விளையாட்டு அட்டைகள் விநியோகிக்கப்படும் என்றும் இதபோல் மேலும் திட்டங்கள் உள்ளதாகவும் இந்த மன்றம் தெரிவித்து உள்ளது.

