சிறப்புத் தேவைகளுடைய நான்கு வயதுச் சிறுவனை, உடல்ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டை பாலர் பள்ளி ஆசிரியர் ஒப்புக்கொண்டுள்ளார். தன் பராமரிப்பில் இருந்த சிறுவனைத் துன்புறுத்தியதுடன் கழுத்தில் இருந்த கீறல்களைப் பற்றி கேட்கப்பட்டபோது அவர் உண்மையை மறைத்தார்.
இதன் தொடர்பான ஒரு குற்றச்சாட்டை நேற்று அந்த 51 வயது மாது ஒப்புக்கொண்டார்.
பள்ளியில் 2013ஆம் ஆண்டுமுதல் சீனமொழி கற்பித்து வந்தார் அந்த மாது. குளியல், உணவு ஊட்டுதல், வெளிப்புற விளையாட்டுகள் ஆகிய நடவடிக்கைகள் தொடர்பில் சிறுவர்களுக்கு உதவும் பொறுப்பு அந்த மாதிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதையடுத்து, 2020ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனுக்கு மாது கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.
சிறுவனுக்குப் பேச்சு தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு உள்ளதாகவும் சிறுவனுக்கு 'ஆட்டிசம்' உள்ளது என 2017ல் மதிப்பிடப்பட்டதாகவும் மாது அறிந்திருந்தார்.
இந்நிலையில், டிசம்பர் 2, 2020ல் பிற்பகல் 12.30 மணியளவில் சிறுவனை உறங்க வைக்க முடியாமல் மாது எரிச்சலடைந்தார்.
தனக்குக் களைப்பாகவும் பசியாகவும் இருந்ததாக மாது கூறியிருந்தார்.
சிறுவனின் தோளைப் பிடித்து இழுத்தல், இடது கையைப் பிடித்தவாறு தரையில் இழுத்துச் செல்லுதல், காதுகளைத் திருகுதல், கழுத்தைக் கீறுதல் எனச் சிறுவனை மாது துன்புறுத்தியது பள்ளியின் காணொளி கேமராவில் பதிவானது.

