துணைப்பாட நிலையம் ஒன்றின் முதல்வரும் அதில் பணிபுரிந்த மூன்று துணைப்பாட ஆசிரியர்களும் 'ஓ' நிலைத் தேர்வின்போது ஆறு மாணவர்களுக்கு உதவியதன் தொடர்பில், இருவரின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தங்களின் தண்டனைக்கு எதிராக நிலையத்தின் முதல்வர் போ யுவென் நியெ, அவரின் உறவினரான முன்னாள் துணைப்பாட ஆசிரியர் ஃபியோனா போ மின் மேல்முறையீடு செய்திருந்ததை அடுத்து, அவர்கள் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது. தங்களின் செயல் 'நேர்மையற்றது' எனக் கருத முடியாது என இருவரும் வாதிட்டனர்.
தவறான முறையில் ஒருவரது சொத்தை அபகரிப்பதும் ஒருவர் தன் சொத்தை இழப்பதும் இச்சம்பவத்தின்போது நிகழவில்லை என்பதால் தங்களின் மீதான மோசடிக் குற்றச்சாட்டு நிரூபணமாவது ஏற்புடையதல்ல என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
துணைப்பாட நிலையத்தின் முன்னாள் ஆசிரியர்கள் தங்களின் மாணவர்கள் மீது தொலைத்தொடர்பு சாதனங்களை ஒட்டியதுடன் அவர்களில் ஒருவர் தனியார் மாணவராகவும் தேர்வு எழுதினார்.
தனியார் மாணவராகத் தேர்வு எழுதிய டான் ஜியா யான், ஒரு கைபேசியைத் தன் நெஞ்சுப் பகுதியில் ஒட்டியவாறு தேர்வுத்தாளை நேரடியாகத் தன் சக ஆசிரியர்களுக்குக் காண்பித்தார். கேள்விகளுக்கான பதில்களைப் பின்னர் ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களிடம் செவி ஒலிப்பான்வழி ரகசியமாகத் தெரிவித்திருந்தனர்.

