சட்டவிரோதக் கும்பலைச் சேர்ந்த 44 வயது ஆல்வின் சுவா ஹான் சூன், 'நாகூர் டிரேடிங்' என்ற போலி நிறுவனத்தின்கீழ் 180க்கும் மேற்பட்ட கட்டணங்கள் தொடர்பில் போலி ஆவணங்களைத் தயாரித்ததுடன் நிறுவனம் குறைந்தது $56 மில்லியன் ஈட்டியுள்ளதாகவும் போலித் தகவல் அளித்திருந்தார்.
போலி நிறுவனம் தொடர்பான குற்றங்களின் விளைவாக சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் (ஐஆர்ஏஎஸ்) கிட்டத்தட்ட $8 மில்லியன் மதிப்பிலான மோசடி உள்நாட்டு உள்ளீட்டு வரிக் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்தக் கோரிக்கைகளில் ஒரு சிலவற்றைக் ஐஆர்ஏஎஸ் கண்டறிந்து தடுத்து வைத்தபோதும் பொருள், சேவை வரி தொடர்பில் திருப்பித் தரப்பட்ட வரிப்பணத்தின் அளவு ஒரு கணிசமான தொகை என்று விசாரணைகளின் வழி தெரியவந்துள்ளது.
நிறுவனத்தின் வர்த்தகத்தை மோசடிக் காரணத்துக்காகப் பயன்படுத்தியது தொடர்பில் குற்றத்தை சுவா ஒப்புக்கொண்டதை அடுத்து, நேற்று சுவாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிக்கல்மிக்க, பெருமளவிலான இந்த விவகாரத்தைக் கையாள்வதற்கு ஐஆர்ஏஎஸ் 41 பரிவர்த்தனை மாதிரிகளைப் பெற்றுக்கொண்டது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 'நாகூர் டிரேடிங்' நிறுவனம் அனுப்பியிருந்த கட்டணச் சீட்டுகளுக்கும் இந்த மாதிரிகளுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடியில் தனக்குச் சுமார் $36,000 முதல் $72,000 வரை லாபம் கிடைத்துள்ளதாக சுவா தெரிவித்திருந்தார். இருப்பினும், சுவா பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்று அறியப்படுகிறது.
எந்தவொரு உண்மை வர்த்தகச் செயல்பாடுகளும் இல்லாத ஒரு போலி நிறுவனம் இந்த 'நாகூர் டிரேடிங்' என்று தெரிவிக்கப்பட்டது.

