தைவானைச் சேர்ந்த தந்தையும் மகளும் 20 ஆண்டு காலமாக அமெரிக்க அதிகாரிகளிடம் சிக்காமல் இருந்து வந்தனர். அவர்கள் சிங்கப்பூரில் காணப்பட்டனர். பிறகு கைது செய்யப்பட்டனர்.
வோனி சென், 57, என்ற மாதும் அவருடைய தந்தையான ரிச்சர்ட் சென், 87, என்பவரும் போலியான ரசீதுகளைப் பயன்படுத்தி கடன் கொடுக்கும் நிறுவனம் ஒன்றிடம் இருந்து US$5 மில்லியன் (S$6.9 மில்லியன்) கடன் பெற்றனர்.
அதையடுத்து அந்த இருவரும் தில்லுமுல்லு தொடர்பில் 2001ஆம் ஆண்டு குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
ரிச்சர்ட் சென் முதல்வராக இருந்தார்.
அவருடைய புதல்வி பிளாஸ்டிக் பைகளை உருவாக்கி விற்கும் 'கோல்டன் பசுபிக் மெனுஃபிராய்ச்சரிங் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்தின் தலைவியாக இருந்தார்.
அந்த நிறுவனத்துக்குப் பணப் பிரச்சினை ஏற்பட்டது. அதனைஅடுத்து அந்த இருவரும் தில்லுமுல்லு காரியங்களில் இறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருவரும் 2001 அக்டோபரில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். 2002 மே மாதம் தண்டனை விதிப்பு தொடர்பிலான விசாரணைக்கு முன்னிலையாக அவர்கள் தவறிவிட்டனர். அதனையடுத்து இருவரையும் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, கலிஃபோர்னியாவைச் சேர்ந்த அமெரிக்க சட்டத் துறை அலுவலகம் இந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சிங்கப்பூரில் அவர்கள் இருவரும் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகளுக்கு சிங்கப்பூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
அமெரிக்கா பிறப்பித்து இருந்த தற்காலிக கைது உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தங்களை அமெரிக்காவுக்கு அனுப்ப அவர்கள் இணங்கி இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அதற்குப் பிறகு, இருவரையும் அமெரிக்காவுக்கு அனுப்ப சிங்கப்பூர் சட்ட அமைச்சு உத்தரவு பிறப்பித்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
அந்த உத்தரவின்படி நவம்பர் 17ஆம் தேதி வோனி சென் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார்.
அடுத்த நாளன்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் அவர் முன்னிலையானார்.
ரிச்சர்ட் சென் அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட காத்திருப்பதாக அமெரிக்க சட்டத்துறை அலுவலகம் தெரிவித்து உள்ளது.

