வேலை நியமன, மாணவர் சேர்ப்பு முகவை ஒன்றில் இயக்குராக வேலை பார்த்த ஒருவர், வாடிக்கையாளர் கொடுத்த $4,400 பணத்தைப் பையில் போட்டுக்கொண்டார்.
இங் யோங் ஷெங், 37, என்ற அந்த இயக்குநருக்கு, நம்பிக்கை மோசடி செய்ததற்காக நேற்று $6,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தில்லுமுல்லு குற்றச்சாட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
'எம்பெயர் குளோபல் ரெக்ரூட்மெண்ட்' என்ற நிறுவனத்தில் இங் வேலை பார்த்து வந்தார். மலேசியாவைச் சேர்ந்த 28 வயது மாது ஒருவர் சிங்கப்பூரில் வேலை பார்க்க அனுமதி பெறுவதற்காக 2017ல் அந்த நிறுவனத்தை அணுகினார். அவருக்கு அனுமதி கிடைத்தது.
அந்த மாதிடம் இருந்து 2017 மே மாதத்திற்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில் நான்கு தவணையாக மொத்தம் $4,400 தொகையை இங் பெற்றுக்கொண்டார்.
அதை அவர் தவறாகப் பயன்படுத்தியதாக விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
தவற்றை மூடி மறைப்பதற்காக அவர் அந்த மாதுக்குப் போலியான ரசீதுகளையும் மின்னஞ்சலையும் அனுப்பினார். இங் 2018 ஜூலையில் அந்த நிறுவனத்தில் இருந்து விலகிவிட்டார். அதில் தான் வைத்திருந்த பங்குகளை விற்றுவிட்டார்.
2018 ஆகஸ்ட்டில் நடந்த கணக்குத் தணிக்கையின்போது இங்கின் குற்றங்கள் அம்பலமாயின.

