அனைத்துலக பணியமர்த்தல் செய்பவர்கள், மேலாளர்களின் உள்ளீடுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (என்யுஎஸ்) பட்டதாரிகள் உலகில் எட்டாவது அதிக வேலைவாய்ப்புத் திறன் பெற்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இது சென்ற ஆண்டைக்காட்டிலும் ஓர் இடம் உயர்ந்துள்ளது என்று உலகளாவிய வேலைத்திறன் பல்கலைக்கழக தரவரிசை மற்றும் கணக்காய்வு தெரிவித்தது.
பிரெஞ்சு மனிதவள ஆலோசனை நிறுவனமான 'எமெர்ஜிங்' மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
12வது ஆண்டாக இந்த அமைப்பு இந்த அனைத்துலக ஆய்வை நடத்தியது.
இந்த ஆய்வின்படி, முதல் 10 இடங்களில் இடம்பெற்ற ஒரே சிங்கப்பூர் பல்கலைக்கழகம் என்யுஎஸ் ஆகும்.
தோக்கியோ பல்கலைக்கழகம் ஏழாவது இடத்தைப் பிடித்தது. ஆசியாவிலிருந்து இவ்விரண்டு பல்கலைக்கழகங்கள் மட்டுமே முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. அனைத்துலக தேர்வாளர்கள், மேலாளர்களிடமிருந்து மொத்தம் 98,014 வாக்குகள் பெறப்பட்டன.
மேலும் 45 நாடுகளைச் சேர்ந்த 250 பல்கலைக்கழகங்கள் வேலைத்திறன் தரவரிசையில் இடம்பிடித்துள்ளன.

