வியட்னாமின் பிடூப் நுயி-பா தேசிய பூங்காவில் காணாமல் போன சிங்கப்பூர் ஆடவரும் வியட்னாமிய பெண்ணும் (படம்) பின்னர் மீட்கப்பட்டனர். அவர்களின் நிலைமை சீராக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்த லக்டுவோங் நகர காவல்துறையினர், கடந்த திங்கட்கிழமை அந்த இருவரும் வனப் பகுதியில் காணாமல் போய்விட்டனர் என்று தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தனர்.
ஆடவருக்கு 22 வயது என்றும் பெண்ணுக்கு 21 வயது என்று தெரிவித்த அவர்கள், அந்த இருவர் டாலாட் நகரிலிருந்து டாக்சி மூலம் தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ள லாங் பியாங் சுற்றுலாத் தளத்துக்குச் சென்றனர்.
காட்டுப் பாதை வழியாக வனப்பகுதிக்குள் சென்ற அவர்கள் பின்னர் தாங்கள் வந்த வழியை மறந்த னர். அவர்களைக் காப்பாற்றிய மீட்புக் குழு, லாங் பியாங் சுற்றுலாத் தளத்துக்கு மீண்டும் அழைத்து வந்தது.
சுற்றுலா வழிகாட்டியின்றி வனப்பகுதிக்குள் சுற்றுப்பயணிகளோ வருகையாளர்களோ செல்ல வேண்டாம் என்று லக்டுவோங் நகர காவல்துறையினர் ஆலோசனை கூறினர்.

