சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர், காலாங் பாருவில் ஒரு பெண்ணை புளோக்கின் மூலையில் தள்ளி மானபங்கப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சில சூழ்நிலைகளில் மோசமான மானபங்கக் குற்றச்செயலில் ஜகதீஸ்வரன் கார்த்திக், 35, ஈடுபட்டதாக இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்திய நாட்டவரான அவர், சென்ற திங்கள்கிழமை பிற்பகல் 12.40 மணியளவில் 25 வயது பெண்ணை புளோக்கின் மூலையில் தள்ளி சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரில், காலாங் பாருவில் அடையாளம் தெரியாத நபரால் மானபங்கப்படுத்தப்பட்டதாக அந்தப் பெண் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து சந்தேக நபரை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். புகார் அளிக்கப்பட்ட ஏழு மணி நேரத்துக்குள் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், "சமூகத்தின் பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்கும் பாலியல் குற்றச்செயல்களை சகித்துக்கொள்ள முடியாது," என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் பேசிய ஜகதீஸ்வரன், அந்தப் பெண்ணை தாம் தொடவே இல்லை என்று மொழிபெயர்ப்பாளர் மூலம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஒரு கையில் தண்ணீர் போத்தலும் மற்றொரு கையில் கைப்பேசியும் இருந்ததாக அவர் கூறினார்.
சிங்கப்பூரில் 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வருவதாகவும் இது போன்ற சம்பவங்களில் முன்னெப்போதும் ஈடுபட்டதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஜகதீஸ்வரன் தன்னைத் தற்காத்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.
இதற்கிடையே, மருத்துவ அறிக்கை மற்றும் சுகாதார அறிவியல் ஆணையத்தின் அறிக்கைக்கு காத்திருப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
ஜகதீஸ்வரனை $15,000 பிணையில் விடுவிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார். டிசம்பர் 22ஆம் தேதி அவர் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும்.
அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, பிரம்படி விதிக்கப்படலாம்.


