எல்லா வார்டுகளும் செயல்பட இயலா நிலை; அறுவை சிகிச்சைகள் ஒத்திவைப்பு
அரசாங்க மருத்துவமனைகளைப் போலவே தனியார் மருத்துவமனைகளும் படுக்கை பற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்குகின்றன.
தனியார் மருத்துவமனைகள் சிலவற்றில் எல்லா வார்டுகளும் செயல்படும் அளவுக்குப் போதிய மனிதவளமும் இல்லை.
ஆகையால் அறுவை சிகிச்சை தேவைப்படக்கூடிய நோயாளிகள் அதிக காலம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
"அறுவை சிகிச்சைக் கூடங்கள் அல்லது படுக்கைகள் போதவில்லை. அதனால் நோயாளிகளை அப்போதைக்கு அப்போது இதர மருத்துவமனைகளுக்கு அனுப்புவது உண்டு," என்று கிளெனிகல்ஸ் மருத்துவமனை அவசரகால சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக் கூடம் காலியாக இல்லாததால் எலும்பு முறிந்துவிட்ட நோயாளி ஒருவரை அரசாங்க மருத்துவமனைக்குச் செல்லும்படி தான் கூறியதாக அந்த எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் கூறினார்.
அதேபோல் 'அஸிஸ் கிளினிக் ஃபார் விமென்' என்ற மருந்தகத்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் அஸிஸ் என்ற மருத்துவர், ஃபார்வே ஈஸ்ட் மருத்துவமனையைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கிறார்.
பிரசவ வார்டுகளைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லை என்ற இவர், தான் சிகிச்சை அளித்துவரும் சில பெண்கள் அறுவை சிகிச்சைக்கு மூன்று மாதம் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது என்றார்.
மவுண்ட் எலிசபெத் நொவினா சிறப்பு வல்லுநர் நிலையத்தின் டெஸ்மண்ட் வெய் கல்லீரல், வயிற்று நோய்ப் பிரிவின் மருத்துவர் டாக்டர் டெஸ்மண்ட் வெய், அறுவை சிகிச்சைக்கான கூடம் கிடைப்பதற்கு மூன்று வாரங்கள் வரை காத்திருக்கவேண்டி இருக்கிறது என்றார். முன்பு இரண்டு, மூன்று நாட்களில் கிடைத்துவிடும் என்றும் அவர் கூறினார்.
அறுவை சிகிச்சைக் கூடங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் வேலை பார்க்க தாதியர்தான் இல்லை என்று அவர் தெரிவித்தார். மவுண்ட் எலிசபெத் நொவினா சிறப்பு வல்லுநர் நிலையத்தில் மருந்தகம் நடத்தும் டாக்டர் சூ சு பின் என்ற மருத்துவர், தாதியர் பற்றாக்குறை காரணமாக எல்லா வார்டுகளும் செயல்பட முடியவில்லை என்றார்.
இதனிடையே, இந்த மருத்துவமனைகளை நடத்தும் 'ஐஎச்எச் ஹெல்த்கேர் சிங்கப்பூர்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் பிரேம் குமார், தாதியர் பற்றாக்குறை காரணமாக இதர பல மருத்துவமனைகளைப் போலவே தங்கள் மருத்துவமனைகளும் முழுமையாகச் செயல்பட இயலவில்லை என்றார்.
இவ்வேளையில், ராபிஃள்ஸ் மருத்துவமனை தலைமை நிர்வாகி டாக்டர் டான் ஷியாங் லுங், தங்கள் மருத்துவமனை சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது என்றாலும் அதிகரித்துள்ள நோயாளிகளைக் கவனிக்கக்கூடிய நிலையில் இருந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் பொது மருத்துவமனைகள் பெரிய அளவில் படுக்கை பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றன. இருந்தாலும் சூழ்நிலை மேம்பட்டுள்ளது என்றும் 2033 முடிவு வாக்கில் புததிாக 4,000 தாதியரை சிங்கப்பூர் வேலையில் அமர்த்தும் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அண்மையில் தெரிவித்தார்.

