சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை வீரர்கள், ஆஸ்திரேலிய அரசு ஆகாயப் படையின் எஃப்35 போர்விமான வீரர்களுடன் சேர்ந்து இரண்டு நாள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அந்த விமானத்தின் ஆற்றல் பற்றி மேலும் பலவற்றை அவர்கள் தெரிந்துகொண்டனர். போர் முறை ஏற்பாடுகளில் அந்த விமானத்தை எப்படி ஒருங்கிணைப்பது என்பது பற்றியும் அவர்கள் பல விவரங்களை அறிந்தனர்.
எஃப்-35 போர் விமானத்தை அமெரிக்காவின் 'லாக்ஹீட் மார்டின்' என்ற தற்காப்பு உடன்பாட்டு நிறுவனம் உருவாக்கியது.
ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த அந்த போர் விமானம், உலகின் ஆக நவீன போர் விமானம் என்று கருதப்படுகிறது.
தென்சீனக் கடல் தெற்குப் பகுதியில் அனைத்துலக ஆகாயவெளிக்கு உட்பட்டு சிங்கப்பூரின் நான்காம் தலைமுறை போர் விமானங்கள், ஆஸ்திரேலியாவின் எஃப்-35ஏ ரக விமானங்களுடன் சேர்ந்து பரந்து பயிற்சியில் ஈடுபட்டன. அந்தப் பயிற்சி செவ்வாய், புதன் இரண்டு நாட்கள் நடந்தது.
அந்தப் பயிற்சி பற்றி கருத்து கூறிய சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் 142 படைப் பிரிவின் தளபத்திய அதிகாரியான லெஃப்டினெண்ட் கர்னல் மாக்ஸ் இங், எஃப்-35 ரக போர் விமானங்கள் பற்றி சிறந்த முறையில் புரிந்துகொள்ள அந்தப் பயிற்சி உதவி இருப்பதாகக் கூறினார்.
அதோடு, அந்த ரக விமானங்களை சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் போர் முறை ஏற்பாடுகளில் எப்படி ஒருங்கிணைக்கலாம் என்பது பற்றியும் நம் வீரர்கள் சிறந்த முறையில் புரிந்துகொள்ள அந்தப் பயிற்சி உதவியது என்றார் அவர்.
போர் விமானத்தில் பறந்து பயிற்சி மேற்கொண்ட இரண்டு ஆகாயப் படைகளையும் சேர்ந்த வீரர்கள், கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகள் பற்றி விவாதித்தனர்.
ஐந்தாம் தலைமுறை, நான்காம் தலைமுறை போர் விமானங்களை ஒருங்கிணைத்து செயல்முறை ஆற்றலை எப்படி மேம்படுத்துவது என்பது போன்றவற்றை அவர்கள் விவாதித்தனர்.
இதனிடையே, "ஆஸ்திரேலிய ஆகாயப் படையுடன் கூடிய அணுக்கமான இரு தரப்பு உறவு காரணமாக வீரர்கள் தொழில்நுட்ப அறிவைப் பெற்று இருக்கிறார்கள்.
"எஃப்-35 விமானங்களை நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் தொடர்பான தலைசிறந்த நடைமுறைகளைப் பற்றியும் அவர்கள் தெரிந்துகொண்டு இருக்கிறார்கள்," என்று நேற்று சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
நான்கு எஃப்-35பி போர் விமானங்களை வாங்கப் போவதாக 2019ல் தற்காப்பு அமைச்சு அறிவித்தது. மேலும் எட்டு விமானங்களை வாங்குவதற்கான விருப்ப உரிமை தன்னிடம் இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.
எஃப்-35 ரக விமானங்களில் மூன்று வகைகள் இருக்கின்றன. அதில் எஃப்-35பி ரக விமானத்தை சிங்கப்பூர் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், அத்தகைய விமானங்களுக்குக் குறுந்தொலைவு ஓடுபாதையே போதுமானதாகும்.
இந்த ரக போர் விமானங்கள் செங்குத்தாக தரையிறங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் 2021ல் நிதி ஒதுக்கீடு பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், சிங்கப்பூர் 2026ஆம் ஆண்டு வாக்கில் நான்கு எஃப்-35பி ரக போர் விமானங்களை வாங்கும் என்று தெரிவித்தார்.
குவாமில் 2029 முதல் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை பயிற்சிகளை தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார்.

