சிங்கப்பூரின் முதலீட்டுச் சொத்துகளில் இருந்து நீண்டகாலப் போக்கில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற துல்லியமான வருவாய் விகிதம் பற்றி துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் விளக்கம்அளித்தார்.
அடுத்த வரவுசெலவுத் திட்டத்திற்காக நாட்டின் முந்திய சேமிப்பில் இருந்து எந்த அளவுக்கு அரசாங்கம் பணம் எடுத்துக் கொள்ள முடியும் என்பதைத் தீர்மானிக்க அந்த வருவாய் எதிர்பார்ப்புகள் பயன்படுத்தப்படும்.
இதுபற்றி அதிபர் ஹலிமா ஃபேஸ்புக்கில் புதன்கிழமை தெரிவித்து இருந்தார்.
அந்த விளக்கக் கூட்டத்தில் அதிபர் ஆலோசனை மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
நிதி அமைச்சு, ஜிஐசி (சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனம்), சிங்கப்பூர் நாணய ஆணையம், தெமாசெக் ஆகியவற்றின் அதிகாரிகள் அதில் கலந்துகொண்டதாக அதிபர் தெரிவித்தார்.
இந்த மூன்றும் அரசாங்கத்தின் சேமிப்பை நிர்வகிக்கின்றன. உலகப் பொருளியல் நிலவரங்கள் பற்றியும் புவிசார் அரசியல் பதற்றங்கள், பருவநிலை பாதிப்புகள் போன்ற முக்கியமான இடர்கள் பற்றியும் முதலீடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய வருவாய் எதிர்பார்ப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் குறித்தும் ஆழ்ந்த அளவில் அந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக அதிபர் தெரிவித்தார்.
அந்த விளக்கக் கூட்டம், வருடாந்திர வரவுசெலவுத் திட்ட நடைமுறையின் முக்கியமான ஓர் அங்கம் என்று அதிபர் ஹலிமா ஏற்கெனவே குறிப்பிட்டு இருக்கிறார்.
வரவுசெலவுத் திட்டத்தைப் பொதுவாக நாடாளுமன்றத்தில் பிப்ரவரி மாதம் நிதி அமைச்சர் தாக்கல் செய்வது வழமை.
ஆனால், அதற்கான திட்ட நடைமுறைகளும் ஆலோசனைகளும் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும்.
ஜிஐசி, நாணய ஆணையம், தெமாசெக் ஆகிய மூன்று அமைப்புகளின் நிர்வாகச் சபையினர், வருவாய் கணிப்புகளை மறுபரிசீலனை செய்து சான்றிதழைத் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
அதேநேரத்தில் அந்த மதிப்பீடுகள் பற்றியும் அந்த மூன்று அமைப்புகள் பயன் படுத்திய நடைமுறைகளையும் அரசாங்கம் சுதந்திரமாக, முழுமையாக மதிப்பிட்டு இருக்கிறது என்று அதிபர் ஹலிமா புதன் கிழமை தெரிவித்தார்.
அரசாங்கம் தெரிவித்து இருக்கும் யோசனை பற்றி அதிபர் ஆலோசனை மன்றத்துடன் விவாதித்து அதன்பிறகு தனது பதிலை தான் அறிவிக்கப் போவதாக அதிபர் குறிப்பிட்டு இருக்கிறார்.
நாட்டின் சேமிப்பிற்கான இரண்டாவது சாவி அதிபர் ஹலிமாவிடம் இருக்கிறது.