போதைப்புழங்கியான மாவுங் மோ மின் ஊயின் சிறுநீர் மாதிரியை மாற்றி தனது சிறுநீரை பரிசோதனைக்கு அனுப்பிய மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவை (சிஎன்பி) சேர்ந்த இரு அதிகாரிகளுக்கு நேற்று சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வேலையை விட்டு நீக்கப்பட்ட 46 வயது அப்துல் ரஹ்மான் காதிருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பிப்ரவரியில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிலிருந்து பதவி விலகி, குற்றம் சுமத்தப்பட்ட மற்றொரு 34 வயதான முஹம்மது ஸுஹைரி ஸைனுரிக்கு ஓராண்டு 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இருவரும் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இருவரும் தலா ஒரு குற்றச் சாட்டின்மீது குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இவ்விரண்டு குற்றவாளிகளைவிட அப்துல் ரஹ்மான் குற்றச்செயலுக்கு அதிக காரணமானவர் என்று நீதிபதி விக்டர் இயோ தெரிவித்தார். குற்றம் புரிந்தவர்கள் குழுத் தலைவராக விளங்கிய அப்துல் ரஹ்மான் குற்றச்செயலை தடுத்திருக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த வழக்கு தொடர்பில், 3வது அதிகாரியான 41 வயதான முஹமட் ஹஃபீஸ் லான், தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவருக்கு ஆகஸ்ட் 2020ல் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
32 வயதான மாவுங் மோ மின் ஊவும், ஒரு தாய்லாந்து பெண்ணும் ஆகஸ்ட் 15, 2018 அன்று இரவு 11 மணியளவில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போதைப் பொருள் உட்கொண்ட சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டனர் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். சிங்கப்பூரைச் சேர்ந்த மாவுங், 'மெத்தபீட்டமைன்' போதைப் பொருளை உட்கொண்டதால், தனது சிறுநீர் மாதிரி பரிசோதனையில் இது தெரியவரும் என்று பயந்தார். இதற்கு முன்னர் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திற்கு (டிஆர்சி) அனுப்பப்பட்ட மாவுங், மீண்டும் பிடிபட்டால், இரண்டாவது முறையாக டிஆர்சிக்கு அனுப்பப் படுவோம் என்பதை மாவுங் அறிந்திருந்தார். இதனால், அவரின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து விடுவார் என்றும் அதைத் தொடர்ந்து, அவரின் பிள்ளைகளை அவரால் பார்க்க முடியாது என்றும் அஞ்சினார்.
இதனால் மாவுங், அதிகாரியான அப்துல் ரஹ்மானிடம் உடனடி சிறுநீர் மாதிரியில் எந்த போதைப் பொருளும் இல்லை என்று கூற உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், சிறுநீர் பரிசோதனைக்கு ஹஃபீஸ் தனது சிறுநீர் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பினார். இதனால் போதைப்பொருள் தொடர்பில் சிக்காமல் தப்பித்த மாவுங், அந்த தாய்லாந்து பெண்ணுடன் மலேசியாவுக்குச் செல்ல முடிந்தது. 17 ஆகஸ்ட் 2018 அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வேறு போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் குழுவினர் மாவுங்கை தடுத்து நிறுத்தி சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது இந்தக் குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது. குற்றம் சுமத்தப்பட்ட ஸுஹைரிக்கும் அப்துல் ரஹ்மானுக்கும் பிணைத் தொகை $20,000 நிர்ணையிக்கப்பட்டது. மேலும், அப்துல் ரஹ்மான் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

