நினைவுத்திறன் குறைபாடுகளுடன் அங் மோ கியோவில் உள்ள பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தில் தங்கி இருக்கும் மூத்தோர் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் நினைவுத்திறன் குறைபாட்டிலிருந்து மீளவும் தொண்டூழியச் சேவையில் ஈடுபடுகின்றனர்.
பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளி மற்றும் ஆலயங்களில் அவர்கள் சேவை புரிகின்றனர்.
Awwa எனப்படும் சமூக சேவை அமைப்பால் தொடங்கப்பட்டுள்ள இந்த முன்னோடித் திட்டத்திற்கு லிவென் பவுண்டேஷன் என்னும் கொடை அமைப்பு இணை ஆதரவு வழங்குகிறது.
பாலர் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடங்களை வாசிக்கவும் தொடக்கப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து காய்கறித் தோட்டம் அமைக்கவும் மூத்தோர் ஈடு
படுத்தப்படுகின்றனர்.
அந்த வகையில் பாசிர் ரிஸ்ஸில் உள்ள இலியாஸ் பார்க் தொடக்கப் பள்ளி, அங் மோ கியோவில் உள்ள ஜாமியா குழந்தை பராமரிப்பு நிலையம், சிராங்கூனில் உள்ள ஸ்ரீ தரும முனீஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் மூத்தோர் தொண்டூழியச் சேவை ஆற்றி வருகின்றனர்.
பொதுவாக, பகல்நேரப் பராமரிப்பு இல்லங்களில் தங்கியிருக்கும் நினைவுத்திறன் குறைபாடு உள்ள மூத்தோர் மறுவாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துப்படுவது வழக்கம். வண்ணமிடுதல், புதிர்ப் போட்டி விளையாட்டுகள் போன்றவற்றில் அவர்கள் ஈடுபடுவர்.
முன்னோடித் திட்டத்தின்கீழ் அவர்களை தொண்டூழியத்தில் ஈடுபட வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
"பாதிக்கப்பட்ட மூத்தோரின் செயல்திறனை ஊக்குவிக்க அவர்களை ஈடுபட வைக்கும் நடவடிக்கைகள் அர்த்தமுள்ளவையாக இருப்பது அவசியம்.
"மேலும் அவர்களின் விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்," என்று விளக்கினார் Awwa சமூக சேவை அமைப்பின் மூத்தோர் பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பிரிவு இயக்குநர் சாய்ராம் ஆஸாத்.
ஆலயத்தில் பூஜைக்காக தட்டில் வைக்கப்படும் பொருள்களை நினைவில் வைக்க மூத்தோருக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


