சிங்கப்பூரில் அடுத்த ஐந்தாண்டுகளில் 13,000 உயர்கல்வி, உயர்நிலைக் கல்வி மாணவர்களுக்குப் பலனளிக்கும் வகையில் $1 மில்லியன் மதிப்பில் புத்தாக்கக்கூடம் நேற்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகத்தில் (எஸ்யுடிடி) 6,200 சதுரஅடி பரப்பளவில் அந்தக் கூடம் அமைந்து இருக்கிறது.
டைசன் என்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனத்தின் ஜேம்ஸ் டைசன் ஃபவுண்டேஷன் என்ற அறநிறுவனம் அந்தக் கூடத்துக்குப் பொறுப்பாதரவு அளித்துள்ளது.
இந்த அறநிறுவனம் சிங்கப்பூரில் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் (ஸ்டெம்) ஆகிய கல்விக்கு ஆதரவு அளிக்கும் வகையில் $3 மில்லியன் திட்டத்தைக் கொண்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக புத்தாக்கக் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.
டைசன் நிறுவனத்தின் நிறுவனர் ஜேம்ஸ் டைசனும் எஸ்யுடிடி தலைவர் சோங் தோவ் சோங்கும் டைசன் எஸ்யுடிடி புத்தாக்கக் கூடத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் டாக்டர் பே சுவான் ஜின் சாட்சியாக உடனிருந்தார். புதிய புத்தாக்கக் கூடத்திற்கு டைசன் நிறுவன பொறியாளர்கள் தலைமை வகிப்பார்கள்.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் வடிவமைப்புச் சிந்தனை யைத் தூண்டிவிடக்கூடிய பயிலரங்குகள் போன்ற பல்வேறு நடவ டிக்கைகள் அங்கு இடம்பெறும்.
பொதுக் கல்வி மாணவர்களுக்கும் அந்தக் கூடம் பல்வேறு வசதிகளை வழங்கும். முப்பரிமாண புத்தாக்கங்கள், பயிலரங்குகள் ஆகியவை அங்கு இடம்பெறும்.
கல்வி அமைச்சின் பொறியியல் தொழில்நுட்பச் செயல்திட்டத்தின்கீழ் கல்விமான்கள் அந்தப் பயிலரங்குகளில் கலந்துகொள்ளலாம்.
விரிவுரையாளர்களின் உரை நிகழ்ச்சி, புத்தாக்கக் கருத்தரங்குகள், பொறியியல் வடிவமைப்பு புத்தாக்கம் பற்றிய பயிலரங்குகள், இயந்திர மனித தொழில்நுட்பம், விவேக உற்பத்தி ஆற்றல், முப்பரிமாண அச்சுத்தொழில், இயந்திரக் கல்வி முதலானவை அந்தக் கூடத்தில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.