செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
faa8a05b-17a0-45e6-8943-3b8406991bc8
-

பிரதமரை அலைக்கழித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

'சீகேட் சிங்கப்பூர்' தொழில்நுட்ப நிறுவனத்தைக் கொளுத்திவிடப்போவதாக மிரட்டி அதன் மூலம் பிரதமர் லீ சியன் லூங்கை அலைக்கழித்ததாக நேற்று 44 வயது ஆடவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

சாய் ஃபூய் செட் என்ற அந்த ஆடவர், இஸ்தானாவில் நவம்பர் 7ஆம் தேதி பிற்பகல் சுமார் 1.51 மணிக்கு ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் அந்த மிரட்டல் செய்தியை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

அலைக்கழிப்பு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்த ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. அந்த ஆடவர் மருத்துவக் கண்காணிப்புக்காக மனநலக் கழகத்தில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் டிசம்பர் 9ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.

குற்றவாளி என்று தீர்ப்பானால் அவருக்கு ஆறு மாதம் வரை சிறை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாகக் கிடைக்கக் கூடும்.

செயின்ட் ஜான்ஸ் முதியோர் இல்லம் அதிகாரபூர்வ திறப்பு

பொத்தோங் பாசிரில் எண் 1 வில்லோ அவென்யூ முகவரியில் உள்ள புதிய கட்டடத்திற்கு 2021 டிசம்பரில் இடம் மாறிய செயின்ட் ஜான்ஸ் முதியோர் இல்லம் நேற்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

சமூக ஒன்றுகூடலுக்கான கூரைத் தோட்டம், நீர் சிகிச்சைக் குளம் போன்ற வசதிகள் அந்தக் கட்டடத்தில் இருக்கின்றன. அந்த இல்லத்தில் 144 பேர் தங்கலாம். இப்போது பாதி நிரம்பி இருக்கிறது. அங்குள்ள அறைகள் அனைத்தும் முதியவர்களுக்குத் தோதான முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

அங்குள்ள முதியவர்கள் புளூடூத் தொழில்நுட்ப முறைப்படி கண்காணிக்கப்பட்டு, தேவையெனில் உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் இருக்கின்றன. அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்றைய அதிகாரபூர்வ திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.

வீட்டில் பராமரிப்புச் சேவை வழங்குவது அல்லது சமூக வயது மூப்பு தொடர்பில் தெள்ளத்தெளிவான உத்திகளும் ஒட்டுமொத்த திட்டமும் சிங்கப்பூருக்குத் தேவை என்று அதிபர் வலியுறுத்தினார்.

கரையோரப் பூந்தோட்டங்களில்

குடும்ப வளாகம், திருமண நிகழ்ச்சி

சிங்கப்பூர் தம்பதியர் இப்போது கரையோரப் பூந்தோட்டங்களில் திருமண நிகழ்ச்சியை நடத்தலாம். குடும்ப உறவை, பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் அங்கு புதிய ஒரு வளாகம் உருவாக்கப்பட்டு உள்ளது.

அந்த வளாகத்தில் குடும்பத்தினர் ஒன்றுகூடி பயனுள்ள வழிகளில் பொழுதைக் கழிக்கலாம். குடும்பப் பிணைப்பை உறவை வலுப்படுத்தலாம். குடும்பத்தினர் சேர்ந்து திருமண நிகழ்ச்சியை நடத்தலாம்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளது.

அந்த வளாகத்தை ஃபேமிலிஸ் ஃபார் லைஃப் மன்றமும் இந்த அமைச்சும் கரையோரப் பூந்தோட்டங்கள் அமைப்பும் கூட்டாக உருவாக்கி இருக்கின்றன.

குடும்ப உறவைக் கட்டிக்காக்கும் நிகழ்ச்சிகளும் செயல்திட்டங்களும் அங்கு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.