சிங்கப்பூர், சுற்றுச்சூழலுக்குத் தோழமைமிக்க நாடாக மாறுவதற்கு ஆதரவாக ஐந்து தொகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்குப் பலமுறை பயன்படுத்தக்கூடிய பெட்டி கொடுக்கப்படுகிறது.
குடியிருப்பாளர்களின் அஞ்சல் பெட்டியில் தகவல் சீட்டுகள் போடப்படும். அவற்றில் விவரங்கள் இருக்கும். அவற்றைப் பார்த்து பெட்டியைப் பெறுவதற்கான நடைமுறைகளைக் குடும்பங்கள் தெரிந்துகொள்ளலாம்.
'நீலப்பெட்டி' என்று குறிப்பிடப்படும் அந்தப் பெட்டியை நவம்பர் முதல் டிசம்பர் வரை 14 இயந்திரங்களில் இருந்து பெறலாம். அந்த நீல நிறப் பெட்டியை மடித்து வைத்துக்கொள்ளலாம்.
அந்தப் பெட்டியில் ஐந்து கிலோ அளவுக்கு காகிதம், பிளாஸ்டிக், உலோகம், கண்ணாடி போன்ற மறுசுழற்சிப் பொருள்களும் மின்னியல் கழிவுப் பொருள்களும் கொள்ளும்.
ஃபெங்ஷான், செம்பவாங் வெஸ்ட், தெம்பனிஸ் நார்த், இயோ சூ காங், யூஹுவா ஆகிய ஐந்து தொகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இப்போது பெட்டி கிடைக்கும்.
மற்றவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் முதல் அது விநியோகிக்கப்படும். முன்னோடி முயற்சியாக இடம்பெறும் இந்த விநியோகச் செயல்திட்டம், தேசிய சுற்றுப்புற வாரியத்தின் 'சரியான மறுசுழற்சி' என்ற இயக்கத்தின் கீழ் இடம்பெறுகிறது.
சிங்கப்பூரர்கள் அதிக பொருள் களை மறுசுழற்சிக்கு உட்படுத்தவும் சரியான முறையில் அதைச் செய்யவும் இந்த இயக்கம் ஊக்கமூட்டுகிறது.
சிங்கப்பூர் அடுத்த பத்து ஆண்டுகளில் மறுசுழற்சி அளவை 70% ஆக ஆக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து அதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.
வரும் 2026ஆம் ஆண்டுவாக் கில் ஒருவர் நாள் ஒன்றில் போடும் குப்பை அளவில் 20% குறைக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் விரும்புகிறது.
இந்த இலக்குகளை வெற்றிகரமான முறையில் சாதிப்பதற்காக 'கழிவில்லா பெருந்திட்டம்', 'சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030' ஆகியவற்றை அது நடைமுறைப்படுத்தி வருகிறது.
நீலப்பெட்டியில் நடுவில் ஒரு தட்டு இருக்கும். அதை வெளியே எடுத்து தேவைக்கு ஏற்ப அங்கும் இங்கும் நகர்த்தி பெட்டியை இரண்டாக தடுத்து வைத்துக்கொள்ளலாம்.
குப்பைகள் பற்றிய விவரங்கள், பெட்டியைத் திறம்பட பயன்படுத்துவது எப்படி என்பதை விளக்கும் தகவல்கள், எந்தெந்த குப்பைகளை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் தகவல்கள் எல்லாம் பெட்டியின் மீது இடம் பெற்று இருக்கும்.
பெட்டி நிரம்பியதும் அதில் உள்ள பொருள்களைக் குடியிருப்புப் பகுதிகளில் காணப்படும் நீல நிற மறுசுழற்சித் தொட்டியில் சேர்க்கலாம் அல்லது மறுசுழற்சிக் குழாய் குப்பைத் தொட்டியில் சேர்க்கலாம்.
இதனிடையே, இந்த மறுசுழற்சிப் பெட்டி இயக்கம் சிங்கப்பூரின் மறுபுழக்க உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் என்று நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறினார்.

