செங்காங் வட்டாரத்தில் உள்ள கூட்டுரிமை வீடு ஒன்றில் மூண்ட தீயில் இரு முதியவர்கள் மாண்டனர். மாண்டவர்கள் 78 வயதான ஆடவரும் மாதும் எனக் கூறப்பட்டது.
ரிவர்வேல் கிரஸ்ட் எனும் கூட்டுரிமை வீட்டில் இன்று காலை தீ மூண்டது. வீட்டில் இருந்த மூவர் சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இருவர் மாண்டனர். 73 வயதான மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நள்ளிரவு ஒரு மணிக்கு தீ குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. 14வது மாடியில் இருந்த வீட்டை சென்றடைந்த தீயணைப்பு அதிகாரிகள் மூவரை மீட்டனர். இருவருக்கு அவசர முதலுதவி அளிக்கப்பட்டது.
தீக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு வீடுகளில் நடந்த தீச்சம்பவங்களில் குறைந்தது ஐந்து பேர் மாண்டனர்.