செங்காங் கூட்டுரிமை வீடு ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 78 வயதான கணவனும் மனைவியும் உயிரிழந்தனர்.
எண் 9, ரிவர்வேல் கிரசெண்டில் உள்ள கூட்டுரிமை வீட்டின் 14வது மாடியில் தீப்பற்றியது குறித்து அதிகாலை 1 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர, கண்ணை மறைக்கும் கரும்புகையின் ஊடே தீயணைப்பாளர்கள் பலவந்தமாக நுழைந்ததாகவும் அது குறிப்பிட்டது.
வீட்டினுள் மூவர் மயக்கநிலையில் காணப்பட்டனர். அவர்களில் இருவருக்கு இதய இயக்கமீட்புக்கான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவ்விருவரும் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் தீப்புண்களால் மாண்டதாக அறிவிக்கப்பட்டது.
மூன்றாமவரான 73 வயது ஆடவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
தீச்சம்பவம் காரணமாக, அக்கம்பக்கத்தில் குடியிருந்த 150 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
சம்பவம் நிகழ்ந்த வீடு திரு டான் சிப் எங், திருவாட்டி ஏலிஸ் இயோ சியூ சூ ஆகியோரின் பெயரில் இருப்பதாக சொத்து ஆவணங்கள் காட்டுகின்றன.

