ஆசிய சிறுவர் இலக்கிய வரலாற்றுத் தொகுப்பு (எச்ஏசிஎல்) என்பதன்கீழ் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் ஏறக்குறைய 5,000 சிறுவர் நூல்களைத் தொகுத்துள்ளது. இந்தத் தொகுப்புக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதில் உள்ள நூல்கள் 1890ஆம் ஆண்டுக்கும் 1990ஆம் ஆண்டுக்கும் இடையில் வெளியிடப்பட்டவை.
'மாவ்கோப்' எனப்படும் ஆசிய பசிபிக் வட்டாரத்துக்கான யுனெஸ்கோ உலக நினைவுச்சுவடுகள் குழு இந்த அங்கீகாரத்தை நேற்று முன்தினம் வழங்கியது.
இந்தத் தொகுப்பில் உள்ள சிறுவர் நூல்கள் ஆசிய கலாசாரம், மரபுடைமை ஆகியவற்றின் தவிர்க்க முடியாத அங்கம் என்று யுனெஸ்கோ குறிப்பிட்டது.
பெரும்பாலும் புனைவுக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், தேவதைக் கதைகள், ஆசியச் சூழலில் எழுதப்பட்ட வரலாற்றுப் புனைவுகள் ஆகியவை இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
ஆசிய வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாறுகள், ஆசியப் பயணக் கட்டுரைகள், பழக்கவழக்கங்கள் பற்றிய நூல்கள் போன்றவையும் இதில் உள்ளன.
ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகியவற்றுடன் பிற ஆசிய மொழிகளில் எழுதப்பட்ட நூல்களும் இதில் உண்டு.
ஒரே தாளில் உருவாக்கப்பட்ட 1900களைச் சேர்ந்த சீனப் புத்தகம் ஒன்று இதில் உள்ளது. மரத்தாலான மேலட்டைகளுடன் பட்டு இழைகளைக் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான நூல்களை இப்போது வேறெங்கும் வாங்க இயலாது.
வருங்காலச் சந்ததியர்க்குப் பயனளிக்கும் வகையில் இவற்றை மின்னிலக்கப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாக தேசிய நூலக வாரியம் குறிப்பிட்டது.
விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலகக் கட்டடத்தின் 9, 11ஆம் தளங்களில் உள்ள லீ கோங் சியன் நூலகத்தில் இந்த நூல்களைக் காணலாம்.