சட்டப்பிரிவு 377Aயை மீட்டுக்கொள்வதன் தொடர்பிலான நாடாளுமன்ற வாக்களிப்பில் பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த மன்ற உறுப்பினர்கள் தங்கள் மனச்சாட்சிப்படி வாக்கு அளிக்க அனுமதிக்கும் வகையில் பாட்டாளிக் கட்சியின் கொறடா உத்தரவு இருக்காது என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பிரித்தம் சிங் கூறியுள்ளார்.
கட்சி உறுப்பினர்கள் கட்சியின் நிலைப்பாடுக்கு ஏற்ப வாக்களிப்பதை உறுதிசெய்ய கொறடா உத்தரவு முறையை கட்சிகள் நடை முறைப்படுத்தும். சில முக்கிய நேரங்களில் கட்டுப் பாடுகளை அகற்றும் வகையில் கொறடா உத்தரவு முறையும் அகற்றப்படலாம்..
மக்கள் செயல் கட்சி அதன் கொறடா உத்தரவு முறையை அகற்றாததைச் சுட்டிய திரு பிரித்தம், அந்த விவகாரம் பற்றி பொதுமக்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவுவதால், அதன் தொடர்பிலான கருத்துகள் நாடாளுமன்றத்தில் போதுமான அளவில் விவாதிக்கப்படவில்லை என்றால் மன்றத்தின் ஜனநாயகத் தன்மை நீர்த்துப்போகும் அபாயம் இருப்பதாகக் கூறினார்.
சட்டப்பிரிவு 377A குறித்து பாட்டாளிக் கட்சியின் ஒன்பது நாடாளு மன்ற உறப்பினர்களும் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளதாகவும் இரண்டு நாள் விவாதத்தின்போது அவர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை விவரிப்பர் என்றும் திரு பிரித்தம் தெரிவித்தார்.
அந்த விவகாரம் பற்றி இருமாறுபட்ட கருத்துகள் கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொவிட்-19 தொற்றால் மன்றத்துக்கு வர இயலவில்லை.
சமயம், மனச்சாட்சி ஆகியவற்றின்படி அல்ஜுனிட் குழுத்தொகுதி உறுப்பினர் ஃபைசஸ் மனாப் சட்டப் பிரிவு மீட்டுக்கொள்ளப்படுவதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளார்.
செங்காங் குழுத்தொகுதி உறுப்பினர் லயிஸ் சுவா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளார்.
நேற்று பேசிய ஐந்து பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களில் அல்ஜுனிட் குழுத் தொகுதியைச் சேர்ந்த உறுப்பினர்களான பிரித்தம் சிங், சில்வியா லிம், லியோன் பெரேரா ஆகியோர் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசினர். ஜெரால்ட் கியாம் (செங்காங்), டெனிஸ் டான் (ஹவ்காங்) ஆகிய எதிராகப் பேசினர்.
"சிங்கப்பூரில் பலரும் அதை சமயக் கண்ணோட்டத்தில் பார்க்கும் நேரத்தில் அதே அளவிலானவர்கள் அதை மனச்சாட்சி சார்ந்த விவகாரமாகக் கருதுவதால் சட்டப்பிரிவு 377A தனித்துவமானது," என்று திரு பிரித்தம் குறிப்பிட்டார்.
சட்டப்பிரிவு மீட்டுக்கொள்ளப்படுவதைத் தாம் ஆதரிப்பதாக திரு பிரித்தம் கூறினார்.
ஆனால் பன்முகப் பாலீர்ப்புச் சமூகத்தினரை அரசியல் பலனுக்காகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக பாட்டாளிக் கட்சி கடந்தகாலத்தில் அவர் களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ கருத்து தெரிவிக்கவில்லை என்று திரு பிரித்தம் விளக்கினார்.
"சட்டப்பிரிவு 377A மீட்டுக்கொள்ளப்படுவதைப் பாட்டாளிக் கட்சி வெளிப்படையாக ஆதரித்திருந்தால் அதனால் சிங்கப்பூர் அரசியலுக்கு நன்மை இருந்திருக்காது என்று நான் நம்புகிறேன். முக்கியமாக பன்முகப் பாலீர்ப்புச் சமூகத்தினரின் நலனுக்கு அது உதவியிருக்காது," என்றார் அவர்.
"எதிர்க்கட்சித் தலைவர் என்று பொறுப்பு தரும் புரிதலைக் கொண்டு பார்த்தால், சட்டப்பிரிவு 377A மீட்டுக்கொள்ளப்படுவது குடும்ப அமைப்புக்கோ சமய நம்பிக்கையின் சுதந்திரத்துக்கோ அரசாங்கம் எதிராக இருப்பதை எவ்விதத்திலும் குறிக்கவில்லை என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை," என்று திரு பிரித்தம் கூறினார்.

