சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி குற்றவியல் பிரிவு சட்டப்பிரிவு 377A மீட்டுக்கொள்ளப்படுவதை ஆதரிக்கிறது. இருப்பினும் அது திருமணம் என்பதன் வரையறை பொது வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கட்சி நம்புவதாக அக்கட்சியைச் சேர்ந்த தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸல் புவா கூறியுள்ளார்.
சட்டப் பிரிவு 377Aயை மீட்டுக்கொள்ளும் அதே வேளையில் திருமண பந்தத்தின் வரையறையைப் பாதுகாக்கவும் அரசமைப்புச் சட்டம் திருத்தப்படுவது குறித்தும் நாடாளுமன்ற விவாதத்தில் திருவாட்டி புவா உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
திருமணத்தின் வரையறை பற்றி பொது வாக்கெடுப்பை நடத்துவது, அந்த விவகாரம் பற்றிய அக்கறையுள்ளவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் என்றார் திருவாட்டி புவா.
அந்த விவகாரத்தில் தமது கட்சிக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்று அவர் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் தங்கள் தனிப்பட்ட கருத்தைக் கொண்டிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சட்டத்தை மாற்ற எது சரியான தருணம் என்று சமூகமே தீர்மானிக்க வேண்டும் என்று தமது கட்சி அப்போது நம்பியதாகவும் அவர் கூறினார்.

