நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியு) தேர்வுத் தாள் கேள்விகள் இணையத்தில் கசிந்ததற்கு மனிதத் தவறே காரணம் என்று கல்வி துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் கூறியுள்ளார்.
அந்தச் சம்பவம் பற்றி என்டியு மேற்கொண்ட விசாரணையில், தேர்வுத் தாளின் மின்னியல் பிரதியை யாரும் திறப்பதைத் தடுப்பதற்குக் கடவுச் சொல் சேர்த்துப் பாதுகாக்க நிர்வாக ஊழியர் ஒருவர் மறந்துவிட்டார் என்று திருவாட்டி கான் கூறினார்.
அதன் காரணமாக, தேர்வு தொடங்கும் முன்னரே மாணவர்கள் தற்செயலாக அந்தக் கேள்வி களைப் பெற்றுவிட்டனர் என்றார் அவர்.
அச்சம்பவம் பற்றி டாக்டர் வான் ரிஸால் வான் சக்காரியா (ஜாலான் புசார் குழுத்தொகுதி), ஜோன் பெரேரா (தஞ்சோங் பகார் குழுத்தொகுதி) இருவரும் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் நேற்று பதிலளித்தார்.
நியாயமான மதிப்பீடு நடைபெறும் வகையில், எல்லா மாணவர்களுக்கும் மீண்டும் வேறு தலைப்புகளில் தேர்வு நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது என்று திருாவட்டி கான் கூறினார்.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, என்டியு அதன் உள்நடைமுறைகளையும் ஊழியர்கள் பெறும் பயிற்சியையும் மறுஆய்வு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மைய ஆண்டுகளில் இதுபோன்று தேர்வுக் கேள்விகள் முன்கூட்டிய கசியவிடப்பட்ட சம்பவங்கள் நடந்தனவா என்று டாக்டர் டான் வூ மெங் (ஜூரோங் குழுத்தொகுதி) கேட்டார். அதற்கு பதில் அளித்த திருவாட்டி கான், அத்தகைய ஐந்து தனித்தனி சம்பவங்கள் நடந்ததாகத் தெரிவித்தார்.

