377A குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவு நீக்கப்படுவதை பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரு ஆதரிக்கிறார், இருப்பிலும் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த நடத்தப்படும் வாக்களிப்பில் தாம் பங்கேற்கப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
திருமணம் தொடர்பான கொள்கைகளைப் பற்றி முடிவெடுக்க நாடாளுமன்றத்துக்கு தனிப்பட்ட, சிறப்புரிமையை இப்போது தந்தால், எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டவைதானா என்பதை நீதிமன்றங்கள் முடிவெடுப்பதை தடுக்க அது பாதை வகுத்துவிடும் என்று செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி ஹி அக்கறை தெரிவித்தார்.
பொதுமக்களின் விருப்பத்துக்கு மாறாக நீதிமன்றங்கள் தீர்ப்பு அளிக்கும் சாத்தியங்கள் உள்ளன என்ற அக்கறை தமக்கு இருக்கும்போதிலும் பொதுவாக சிங்கப்பூர் நீதிமன்றங்கள் மிகுந்த கவனத்துடன் முடிவு எடுப்பதை அவர் சுட்டினார்.
சட்டங்களை நிறைவேற்ற நாடாளுமன்றம் கொண்டுள்ள அம்சத்துக்கு நீதிமன்றங்கள் மதிப்பளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், அடிப்படைக் கொள்கையை மறந்துவிடக்கூடாது என்று அவர் சக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் நியாயமானவைதானா என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் நீதித் துறைக்கு இருக்க வேண்டும் என்று திருவாட்டி ஹி வலியுறுத்தினார்.
377A சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பாக முடிவெடுப்பதில் நீதிமன்றத்தின் பங்களிப்பு இல்லாமல் அதைத் தற்போது ஓரங்கட்டினால் எதிர்காலத்தில் இதுபோன்ற முக்கிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்போது நீதிமன்றம் ஓரங்கட்டப்படாது என்பது என்ன நிச்சயம் என்று திருவாட்டி ஹி குரல் எழுப்பினார்.
இதற்கு முன்பு, ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவை குற்றம் எனக் கூறும் 377A சட்டப்பிரிவை நீக்குவது குறித்தும் ஆண்-பெண் இல்லற வாழ்க்கையைப் பாதுகாக்க பரிந்துரைக்கப்படும் அரசமைப்புச் சட்ட திருத்தங்கள் பற்றியும் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம் பங்கேற்றார்.
இந்தச் சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால் ஆண்-பெண் திருமணம் தொடர்பான கொள்கைகள் குறித்தும் சட்டங்கள் குறித்தும் விளக்கம் கேட்டகவும் மாற்றவும் நீதிமன்றத்தை நாட முடியாது என்று அவர் தெரிவித்திருந்தார்.
எதிர்கால அரசாங்கம் மட்டுமே திருமணம் தொடர்பான கொள்கைகளையும் சட்டங்களையும் மாற்ற முடியும் என்று அக்கறை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையே திருவாட்டி ஹி மீண்டும் வலியுறுத்தினார்.
இருப்பினும், செங்காங் குழுத் தொகுதியின் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான ஜேமஸ் லிம் இதை ஏற்க மறுத்தார்.
சமுதாயம் குறித்து இத்தகைய மிக முக்கியமான விவகாரங்கள் தொடர்பாக முடிவெக்க நாடாளுமன்றம்தான் சரியான தளமாகும் என்றார் அவர்.
377A சட்டப்பிரிவை நீக்கா
விடில் ஒத்த பாலீர்ப்புடைய சமூகத்தினர் சிலருக்கு மனநல ஆதரவு வழங்குவது சிரமமாக இருக்கும் என்று செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு லுயிஸ் சுவா தெரிவித்தார்.
"377A சட்டப்பிரிவை நீக்காமல் வைத்திருந்தால் சிங்கப்பூர் ஒரு பழைய பஞ்சாங்கம் என்ற தோற்றத்தைக் கொடுத்துவிடும்.
"இது ஆசிய நிதி மையம் என்ற சிங்கப்பூருக்கு இருக்கும் கௌரவத்தைப் பாதிக்கும்," என்றார் திரு சுவா.
ஹாங்காங், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் ஒரே பாலினச் சேர்க்கை குற்றமில்லை எனக் கூறும் சட்டத்தை நிறைவேற்றிவிட்டதை அவர் சுட்டினார்.

